தேங்காய், விபூதி பிரசாதத்துடன் வந்த இளையராஜா... விமானத்துக்குள் அனுமதி மறுப்பு !
பெங்களூரு: தேங்காய், விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்களுடன் வந்த, இசைஞானி இளையராஜாவை விமானத்தில் செல்ல அனுமதி மறுத்ததால் பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இசைஞானி இளையராஜா தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று வந்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜா உள்ளிட்டோரை சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் கொண்டுவந்த பையில் தேங்காய், விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து பிரசாதப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்கு விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்துள்ளார்.அதையும் போலீசார் அழித்தாக தெரிகிறது. இதையடுத்து பிரசாதப் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
முன்னதாக தேங்காய்,விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்களுடன் குருவாயூர், மூகாம்பிகை கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்றுவிட்டு பிரசாதப் பொருட்களுடன் இளையராஜா விமானத்தில் பயணம் செய்துள்ளார். முதல் முறையாக பிரசாதப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக அவரை பாதுகாப்பு அறையில் 1 மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.