சபரிமலை மகர விளக்கு.. எருமேலியில் பேட்டைத் துள்ளல்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி இன்று பேட்டைத்துள்ளல் நடைபெற்றது.
நாளை மதியம் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது. மகரஜோதி விழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சபரிமலையில் மகரஜோதி விழா நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் நிற்கும் இடங்களில் முன்கூட்டியே செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புல்மேட்டில் நடந்த விபத்தைத் தொடர்ந்து தற்ப்போது அங்கு சுமார் 1500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர். மருத்துவ வசதிகளுக்காக மருத்துவ குழுவினரும் நிறுத்தப்படுகின்றனர். மேலும் போதுமான வெளிச்சம் கிடைக்க சக்தி வாய்ந்த மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது.

தகவல் தொடர்புக்காக நாளை முதல் புல்மேட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் அதி வேக திறன் கொண்ட தற்காலிக டவர்களும் அமைக்கப்படுகின்றன. பாண்டித்தாவளம், பம்பை ஹில்டாப், அட்டத்தோடு உள்ளிட்ட இடங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. பக்தர்கள் மின்சார டிரான்ஸ்பார்மர்களில் ஏறி நின்று ஜோதி பார்ப்பதை தடுப்பதற்காக எல்லா டிரான்ஸ்பார்மர் களுக்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வரும் 13-ம் தேதி தற்போது இருக்கும் போலீசாரோடு பாதுக்காப்பு பணியில் ஈடுபட தமிழகம்,உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் போலீசார் சபரிமலை வர இருக்கின்றனர்.
மண்டல காலம் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக பேட்டைதுள்ளல் நடைபெற்றாலும், மகரவிளக்குக்கு முன்னோடியாக நடைபெறும் ம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு பின்னர் இங்கு வேறு பேட்டைதுள்ளல் நடைபெறாது. இன்று பகல் 12.30 மணி வாக்கில் அம்பலாப்புழா பக்தர்களும், மாலை மூன்று மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளல் நடத்தினர். இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை வந்து சன்னிதானம் வருவர்.
மரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நாளை மதியம் பந்தளத்திலிருந்து புறப்படுகிறது. நாளை காலை முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக திருவாபரணங்கள் வைக்கப்படும். பின்னர் திருவாபரணம், மதியம் உச்சபூஜைக்கு பின்னர் பெட்டகங்களில் அடைக்கப்பட்டு தலைசுமையாக சன்னிதானம் நோக்கி புறப்படும்.வானில் கருடன் வட்டமிட பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க ஆபரணப் பெட்டி பவனி 14-ம் தேதி மாலை 6.20 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். அதன் பின் திருவாபரணங்கள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெற்ற சில நிமிட நேரங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி காட்சி தரும்.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு பாராட்டு விழா
இதற்கிடையே, சபரிமலையில் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக பூஜை செய்த தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சபரிமலை தாந்திரிக உரிமை தாழமண் குடும்பத்திடம் உள்ளது. இந்த மடம் செங்கன்னூர் அருகே அமைந்துள்ளது. சபரிமலையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தாழமண் தந்திரிகளிடம் ஆலோசனை செய்த பிறகே இறுதி செய்யப்படுகிறது. தற்போது இந்த குடும்பத்தில் கண்டரரு மகேஷ்வரரு, கண்டரரு ராஜீவரரு என இரண்டு தந்திரிகள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் சபரிமலை பூஜைகளை கவனிக்கின்றனர்.
தந்திரி கண்டரரு ராஜீவரரு, கண்டரரு கிருஷ்ணரருவின் மகன். 1980-ல் தந்தையுடன் சபரிமலையில் பூஜைகளுக்கு உதவியாக வர தொடங்கினார். 1990-ல் கிருஷ்ணரரு இறந்த பின்னர் ராஜீவரரு சபரிமலை தந்திரியாக பொறுப்பேற்றார். 25 ஆண்டுகள் பணிபுரிந்த அவருக்கு சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன் நாயர் தலைமை வகித்தார். சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சதீஷ் வரவேற்றார். கேரள உளவுத்துறை டிஐஜி விஜயன், பி.ஆர்.ஓ. முரளி, ஆர்.ஏ.எப். கமாண்டர் விஜயன், சன்னிதானம் போலீஸ் தனிஅதிகாரி விமல், சன்னிதானம் மருத்துவ முகாம் அதிகாரி டாக்டர் சுரேஷ்பாபு, ஐயப்பா சேவா சங்க முகாம் அதிகாரி பாலன், ஐயப்பா சேவா சமாஜம் தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications