சஞ்சய் தத் விடுதலைக்கு எதிராக பொதுநல வழக்கு
மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்டு, 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தின் போது, இந்தி நடிகர் சஞ்சய் தத் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அவருக்கு மும்பை தடா கோர்ட்டு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 2013-ம் ஆண்டு அவரது சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு 5 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பு அளித்தது. அவர் ஏற்கனவே 1.5 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், எஞ்சிய 3.5 ஆண்டு சிறை வாசத்துக்காக புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்படுவார் என்று சமீபத்தில் மராட்டிய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறை தண்டனை முடிவதற்கு 114 நாட்களுக்கு முன்னதாக நாளை அவர் விடுதலை செய்யப்பட உள்ளார்.
இதனை கொண்டாடும் வகையில் ஒரு ஓட்டல் உரிமையாளர் நாளை அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்வதை எதிர்த்து சமூக ஆர்வலர் பிரதீப் பலேக்கர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது மனுவில் சஞ்சய் தத்தின் சிறைவாசம் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ள அவர், சாதாரண கைதிகளுக்கு வழங்காத பல்வேறு வசதிகளை அதிகாரிகள் அவருக்கு செய்து கொடுத்தது பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘சஞ்சய் தத்தை விடுதலை செய்யும் அரசின் முடிவை ரத்து செய்துவிட்டு, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அவரது 5 ஆண்டு தண்டனைக்காலம் முழுவதையும் அனுபவிக்க உத்தரவிட வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த பொதுநல வழக்கு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியபோதும், சஞ்சய் தத் விடுதலையை பாதிக்காது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications