சந்திரகிரகணம்... திருப்பதி கோவிலில் நெரிசல்.. 15 பேர் படுகாயம்
திருமலை: திருப்பதி கோவிலில் கட்டுக்கடங்கா கூட்ட நெரில்சலில் சிக்கி 15 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
சந்திரகிரகணத்தை முன்னிட்டு நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை காலை 9 மணி முதல் 11 மணி நேரம் மூடப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல்தான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று கட்டுக் கடங்காமல் இருந்தது.

தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் கியூ காம்ளக்ஸ் திறக்கப்பட வில்லை. ஆனால் பக்தர்கள் கியூ காம்பளக்ஸ் முன்பு திரண்டு நின்றனர். கியூ காம்பளக்சில் நிற்க அனுமதிக்கும்படி கோவில் ஊழியர்களை கேட்டனர். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனால் ஊழியர்களுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாலை 4 மணி அளவில் பி.பி.சி. பகுதியில் திரண்டு நின்ற பக்தர்கள் ஊழியர்களை தள்ளிவிட்டு கியூவில் நுழைய முயன்றனர்.
இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. பலர் முண்டியடித்து சென்றதால் பெண்களும், முதியவர்களும் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்து சிலர் சென்றனர். இதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications