குளச்சல் துறைமுகம் திட்டத்தைக் கைவிட முடியாது: பினராயி விஜயனிடம் மோடி திட்டவட்டம்
டெல்லி: தமிழகத்தின் குளச்சல் துறைமுகம் திட்டத்தைக் கைவிட முடியாது என்று தம்மை நேரில் சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், குளச்சல் துறைமுக திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். ஆனால், இனயத்தில் அமையும் குளச்சல் துறைமுக பணிகளை தடுக்க முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக பிரதமரை சந்தித்து முறையிட்ட பிறகு கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:
பிரதமரிடம் குளச்சல் துறைமுகத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினோம். இதனால் கேரளாவின் விழிஞம் துறைமுகம் பாதிக்கும் என சுட்டிக்காட்டினோம்.
ஆனால் விழிஞம், குளச்சல் துறைமுகம் அருகருகே அமைந்தால் அதிக வருமானம் கிடைக்கும். இரு துறைமுகங்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டு வளர்ச்சி அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
அத்துடன் 2 துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.