உலகிலேயே பெரிய மாவீரர் சிவாஜி சிலை... அரபிக்கடலோரம் அமைக்க மகாராஷ்டிர அரசு ஓப்புதல்
மும்பை: சுற்றுலா மக்களைக் கவரும் வகையில் அரபிக் கடலோரம் பிரம்மாண்ட சிவாஜி சிலை அமைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற மகாராஷ்டிர சட்டசபைக் கூட்டத்தில், மராட்டிய மாவீரர் சிவாஜிக்கு சிலை அமைப்பது குறித்து சமர்ப்பிக்கப் பட்ட திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் அம்மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான்.
இந்தச் சிலையானது அரேபியன் கடலில் உள்ள சுமார் 16 ஹெக்டேர் அளவுள்ள பாறையில் நிறுவப் பட உள்ளது. இதற்கான முதல்கட்டத் தொகையாக ரூ 100 கோடிக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2004 மற்றும் 2009ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்ட இந்தப் பிரமாண்ட சிலைக்கான ஆரம்ப வேலை விரைவில் தொடங்கப் பட இருக்கிறதாம்.

அது சஸ்பென்ஸ்....
இச்சிலை குறித்து அம்மாநில முதல்வர் பிரித்விராஜ் சவுகான் கூறுகையில், ‘இந்தச் சிலையே உலகில் உயரமான சிலையாக இருக்கும். ஆனால், தற்போதைக்கு இதன் சரியான உயரத்தை தெரிவிக்க இயலாது'எனத் தெரிவித்துள்ளார்.

அமைவிடம்....
சிலை அமையவுள்ள இடமானது ராஜ்பவனில் இருந்து சுமார் 1.2 கி.மீ தொலைவிலும், கிர்காமிலிருந்து 3.6கிமீ தொலைவிலும், நாரிமானிலிருந்து சுமார் 2.6கிமீ தொலைவிலும் அமைய உள்ளது. மேலும், இச்சிலையானது அலைகளால் பாதிக்கப் படா வண்ணம் கடல் மட்டத்திலிருந்து உயர்த்தி அமைக்கப் பட உள்ளது.

போட்டி...
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் இலக்கான சர்தார் வல்லபாயின் சிலையை முறியடிக்கும் வகையில் இந்தத் திட்டம் இயற்றப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்தார் வல்லபாய் படேல் சிலை....
குஜராத்தில் அமையப் பெற உள்ள இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு ‘ஒற்றுமை' எனப் பெயரிடப் பட்டுள்ளது. இது சுமார் 182 மீட்டர் உயரத்தில், சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மியூசியம்....
அதேபோல், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் ஆறு அடியில் மராட்டிய வீரர் சிவாஜிக்கு சிலையும், அதன் அருகிலேயே சிவாஜி குறித்த நினைவகம் அமைக்கவும் இருப்பதாக முதல்வர் சவுகான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications