மோடி பாட்டுக் கச்சேரியில் பேசுவார்.. நாடாளுமன்றத்தில் பேசமாட்டார்.. ராகுல்காந்தி காட்டம்
பாட்டு கச்சேரியில் பேசும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஏன் பேசுவதில்லை என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதில்லை. மாறாக பாட்டுக் கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதாரண மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், வங்கியில் உள்ள தங்களுடைய பணத்தை எடுக்கவும் பெரும்பாடு பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே ராஜ்யசபா மற்றும் லோக் சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு பதிலையும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அளித்ததில்லை.
இந்நிலையில், இன்று, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும், பாட்டுக் கச்சேரி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் மோடியால் நாடாளுமன்றத்தில் பேச முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
ரூபாய் நோட்டு விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளதால், தொடர்ந்து லோக் சபாவை நடத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.