பண ஒழிப்பு.. உலகின் மிகப்பெரிய முன் யோசனை இல்லாத நிதி நடவடிக்கை! - ராகுல் காந்தி
டெல்லி: உயர்மதிப்பு நோட்டுக்களான ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்ததன் பின்னணியில் முறைகேடு உள்ளது; எனவே இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது பிரதமர் மோடி மேற்கொண்ட 'உலகின் மிகப்பெரிய முன்யோசனை இல்லாத நிதி சார்ந்த நடவடிக்கை' என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில், காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி
போராட்டத்தின்போது ராகுல் காந்தி பேசுகையில், "ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென பிரதமர் அறிவித்து ஏன்?
இந்த விவகாரத்தை தனது தொழில்துறை நண்பர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் மட்டும் முன்கூட்டியே மோடி தெரிவித்துவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அவர் விளக்கமளிக்க வேண்டும்.
பிரதமரின் செயல் 'உலகிலேயே முன்யோசனை எதுவும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நிதி சார்ந்த நடவடிக்கை' ஆகும். இது தொடர்பாக அவர் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை. நிதியமைச்சர், மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகருக்குக் கூட இது குறித்துத் தெரியவில்லை.

மோடியின் நண்பர்களுக்கு முன்கூட்டியே தெரியும்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளிவருவதற்கு சில நாள்களுக்கு முன்பே பல வங்கிகளில் டெபாசிட் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில பாஜகவினருக்கும், மோடியின் தொழில்துறை நண்பர்களுக்கும் இந்த அறிவிப்பு குறித்து முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த விஷயம் மத்திய நிதியமைச்சருக்குத்தான் தெரிவிக்கப்படவில்லை. எனவேதான் அவர் காங்கிரஸை குறைகூறி வருகிறார்.
தனது நடவடிக்கை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்க வேண்டுமென்றும், விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்றும் 200 எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதால்தான் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்க பயப்படுகிறார்.

மக்களைத் துன்புறுத்துவது ஏன்?
ரூபாய் நோட்டு விவகாரத்தின் பின்னணியில் ஏதோவொரு ஊழல் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே, இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளுமே கருப்புப் பணத்துக்கும், ஊழலுக்கும் எதிராகப் போராடித்தான் வருகின்றன. ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் ஏன் பல கோடி மக்களை பிரதமர் துன்புறுத்தி வருகிறார்? என்பதே.

பாதிப்பு
இந்தியப் பொருளாதாரச் செயல்பாடு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது அதில் மிகப்பெரிய பாதிப்பை மோடி ஏற்படுத்திவிட்டார். விவசாயிகள், தொழிளாளர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்-பூட் அணிந்த யாராவது வங்கி வாசலில் வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிகிறதா? பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் யாரேனும் வரிசையில் நிற்கிறார்களா? இல்லை. ஏழை, எளிய மக்கள் மட்டும்தான் வரிசையில் காத்திருக்கின்றனர்.

அவமானம்
பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்றால் அது மிகப்பெரிய அவமானம்.
நாங்கள் இங்கு நடத்தும் போராட்டம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழை மக்களின் வேதனைக் குரலின் எதிரொலி; அவர்களின் பிரதிநிதிகளாகவே இந்தப் போராட்டத்தை எம்.பி.க்களாகிய நாங்கள் நடத்துகிறோம்," என்றார்.












Click it and Unblock the Notifications