594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி! அதானி குழுமம் உருவாக்கிய மெகா திட்டம்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் 594 கி.மீ. கங்கா விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 29ம் தேதி திறந்து வைத்தார். இந்தியாவின் மிகப் பெரிய பசுமை வெளி உள்கட்டமைப்பு திட்டமான இது, மீரட்டை பிரயாக்ராஜுடன் இணைக்கிறது.
ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்ட இது, எதிர்காலத்தில் எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படலாம். மூன்றரை ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் கட்டப்பட்ட இச்சாலை, மீரட்-பிரயாக்ராஜ் பயண நேரத்தை 11 மணிநேரத்தில் இருந்து சுமார் ஆறு மணிநேரமாகக் குறைக்கிறது. இதனால் பயண நேரம் ஐந்து மணிநேரம் குறைவதோடு, 30% எரிபொருள் சேமிப்பும் கிடைக்கும்.

கங்கா எக்ஸ்பிரஸ் சாலை
கங்கா எக்ஸ்பிரஸ் சாலை, உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான உந்துசக்தி. இது லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தும்.. தொழில்துறைப் பெருவழிகளை வளர்த்து, சந்தைகள், சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும். அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று லட்சம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இத்திட்டம் ஆண்டுக்கு ₹25,000-₹30,000 கோடி சரக்கு போக்குவரத்துச் சேமிப்பையும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) ₹1 லட்சம் கோடிக்கு மேல் பங்களிப்பையும் அளிக்கும். 12 மாவட்டங்கள் வழியாக, 519 கிராமங்களை இணைக்கும் இச்சாலை, எட்டு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு நேரடிப் பலன் தரும்.
பலருக்கும் உதவும்
விவசாயிகள், வர்த்தகர்கள், சிறு வணிகர்கள் சாகுபடிப் பொருட்கள், சரக்குகளின் விரைவான போக்குவரத்து, மேம்பட்ட சந்தை அணுகல், சிறந்த விலை நிர்ணயம் ஆகியவற்றால் பயனடைவர். குறைந்த போக்குவரத்து நேரம், செலவுகள் மாநிலத் தொழில்களை ஆதரித்து, விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும்.
பாதுகாப்பு அம்சமாக, ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்காக 3.5 கி.மீ. அவசரக்கால விமான இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.. இது பாதுகாப்புத் தயார்நிலையை வலுப்படுத்தும். மேலும், செயற்கை நுண்ணறிவு கேமரா அமைப்புகள் மூலம், சாலைப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, விபத்துகள் தடுக்கப்படும்.
மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை
மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை நீளும் 12 மாவட்ட வழித்தடத்தில், உத்தரப் பிரதேச அரசு பல தொழில்துறைப் பெருவழிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இது முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் ஈர்த்து, கிழக்கு உத்தரப் பிரதேசத்தை முக்கிய பொருளாதார மையங்களுடன் இணைத்து, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும்.
கங்கா எக்ஸ்பிரஸ் சாலை, மத, ஆன்மீகச் சுற்றுலாவிற்கும் ஊக்கமளிக்கும். பிரயாக்ராஜ், வாரணாசி, கார்முக்தேஷ்வர், கல்கிதாம், பெல்ஹாதேவி, சந்திரிகா சக்தி பீடம், திரிவேணி சங்கமம் போன்ற புனிதத் தலங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையையும், உள்ளூர் வாழ்வாதார வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
குறைந்த பயண நேரம், எரிபொருள் சேமிப்பு, மேம்பட்ட இணைப்பு என கங்கா விரைவுச்சாலை, உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார எதிர்காலத்தை மறுவடிவமைத்து, மாநிலம் முழுவதும் நீண்டகால வளர்ச்சிக்கு உந்துசக்தி ஆகும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமாகும்.












Click it and Unblock the Notifications