பள்ளிக் குழந்தைகள் சுட்டுக் கொலை: 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த மோடி வேண்டுகோள்
டெல்லி: பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் தாலிபன்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், 132 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பலியான அக்குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியப் பள்ளிகளில் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் பெஷாவரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளி ஒன்றில் நேற்று புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தினர். இதில், 132 மாணவர்கள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர்.

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த தாக்குதல் குறித்து உலகத் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, பள்ளியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கண்டனத்தையும், பலியான பள்ளி குழந்தைகளுக்காக இந்தியாவின் இரங்கலையும், வருத்தத்தையும் அவர் தெரிவித்தார்.
பின்னர், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ‘பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான பள்ளி குழந்தைகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று (புதன்கிழமை) 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும்படி' கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று இந்தியாவில் உள்ள பள்ளிகளில் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர் பாகிஸ்தான் பள்ளியில் பலியான குழந்தைகளுக்கு தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications