மோடியின் பென்ஷன் உரையால் அதிருப்தி.. அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க ஓய்வுபெற்ற ராணுவத்தினர் முடிவு
டெல்லி: ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் குறித்த மோடியின் அறிவிப்பில் திருப்தியடையாத முன்னாள் ராணுவ வீரர்கள், அரசின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை, அவர்கள் பணிக்கு சேர்ந்த ஆண்டை கொண்டு வேறுபடுகிறது. சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களைவிட, முன்பே ஓய்வு பெற்றவர்களுக்கு குறைவான பென்ஷன் கிடைக்கிறது.
எனவே, ஒரே மாதிரியான ரேங்கில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும், ஒரே மாதிரியான பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஒரே மாதிரியான பென்ஷன் கேட்டு டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், அதுகுறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சுதந்திர தின உரையில் மோடி கூறியதாவது: "ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் பிரச்சினை, அனைத்து அரசுகள் முன்பாகவும் வந்து கொண்டுள்ளது. சிலர் சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள். ஆனாலும், பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.
ஆனால், எனது அரசு, இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துள்ளது. செங்கோட்டையில், மூவர்ணகொடியின் கீழ் நின்று ராணுவத்தினருக்கு நான் வாக்குறுதி அளிக்கிறேன்.. நாங்கள் ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளோம். சில பேச்சுக்கள் மட்டுமே இன்னும் பெண்டிங்கிலுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இருப்பினும் திட்டத்தை அமல்ப்படுத்தும் தேதி உள்ளிட்டவை குறித்த தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதால், முன்னாள் ராணுவத்தினருக்கு இது முழு வெற்றியாக அமையவில்லை.
ஒரு ரேங்க், ஒரு பென்ஷன் குறித்த மோடியின் அறிவிப்பில் திருப்தியடையாத முன்னாள் ராணுவ வீரர்கள், அரசின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
மோடியின் சுதந்திர தின உரைக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற மேஜர் சத்பிர் சிங் "மோடியின் அறிவிப்பு எங்களுக்கு திருப்திதரவில்லை. ஒரே ரேங்க், ஒரே பென்ஷன் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக மோடி கூறியுள்ளார். இது 17 மாதங்கள் முன்பே ஏற்கப்பட்டுவிட்டது. இப்போது செயல்படுத்துவதுதான் பாக்கி. அதுபற்றி மோடி தெரிவிக்கவில்லை.
பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி இனிமேல் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். 1965ம் ஆண்டு அல்லது 1971ம் ஆண்டு போர் வெற்றி விழாவாக இருந்தாலும்கூட நாங்கள் புறக்கணிக்க உள்ளோம்"என்றார்.