மோடி ஒன்றும் பேரரசர் இல்லை பிரதமர் தான்- சோனியா கடும் தாக்கு
டெல்லி: நாட்டில் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, மோடி அரசு கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. மோடி என்பவர் இந்தியாவின் பிரதமர்தான். இந்தியாவின் பேரரசர் அல்ல என்று காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியாகாந்தி கூறியுள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை அக்கட்சியினர் மிகப்பிரம்மாண்டமான முறையில் இந்திய முழுவதும் கொண்டாடி வருகிறது.

இதனைக்குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இதுபோன்ற நிலையை இதுநாள்வரை எப்போதும் நான் பார்த்தது இல்லை. இங்கு இருப்பவர் பேரரசர் அல்ல பிரதமர் தான் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் நாட்டில் கொடிய வறுமை மற்றும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கின்றனர். இப்படிபட்ட நிலையில் இதுபோல் விழா கொண்டாடுவது தேவையற்றது" என்று கூறினார்.
கடந்த 2009ம் ஆண்டு சோனியாகாந்தியின் மருமகனான வதேரா, பினாமிகளின் மூலம் லண்டனில் விடுதியொன்றை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, மத்திய அரசு வதேரா மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது குறித்து கருத்து கூறிய சோனியா, "காங்கிரஸ் மீது பாஜக தினம் ஒரு பொய்க்குற்றச்சாட்டை சொல்லிவருகிறது. வதேரா மீதான குற்றச்சாட்டு காங்கிரஸுக்கு எதிரான சதி என்று கூறினார்.
வதேரா என்னுடைய மருமகன் என்பதாலேயே குற்றம் சாட்டப்படுகிறார். அவர்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரட்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற பாஜக அஜெண்டாவின் ஒருபகுதிதான் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications