ஆடுகளை விற்று கழிவறை கட்டிய 104 வயது பாட்டி... காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஆடுகளை விற்று கழிவறை கட்டிய 104 வயது மூதாட்டியின் காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
சத்தீஸ்கர் மாநிலம், நயா ராய்ப்பூரில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

திறமைகளை மேம்படுத்த வேண்டும்...
இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளை மற்றவர்களுக்கு அளிப்பவர்களாக இருக்க ஆசைப்பட வேண்டும். இதற்குத் திறமைகளை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். திறமை மேம்படும்போது வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

முத்ரா திட்டம்...
முத்ரா திட்டத்தின்கீழ் புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே சிறிய அளவில் தொழில் நடத்தி வருவோர், அதனை மேம்படுத்த வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி...
தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் அரசு, தனியார் துறையின் பங்களிப்புதான் முக்கியமானது என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதைவிட முக்கியமாக மூன்றாவதாக ஒரு துறை உள்ளது. அது, தனிநபர் துறை. ஒவ்வொரு தனிநபரும் ஒரு தொழில்முனைவோராகும்போது தேசம் வளர்ச்சிப் பாதையில் பல உயரங்களை எட்டிப்பிடிக்கும். முத்ரா திட்டத்தில் இதுவரை 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாவர். ஏராளமான பெண்களும் ஆர்வத்துடன் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர்.

வீடில்லா மக்கள்...
நமது நாடு சுதந்திரமடைந்து சுமார் 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் 5 கோடி குடும்பங்களுக்கு தங்கிக்கொள்ள வீடு இல்லை. வீடற்ற இந்த ஏழை மக்களில் 2 கோடி பேர் நகரங்களிலும், 3 கோடி பேர் கிராமங்களிலும் வசிக்கின்றனர்.

கனவுத் திட்டம்...
நமது நாடு 2022-ஆம் ஆண்டில் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும். அப்போது நமது தேசம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வோர் இந்தியரும் எண்ணிப் பார்க்க வேண்டும். 2022-ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கு 5 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். இதனை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் இணைந்து பாடுபட வேண்டும். இது சாதாரண உள்கட்டமைப்புத் திட்டமல்ல; நமது நாட்டின் ஏழை,எளிய மக்களின் கனவை வலுப்படுத்தும் திட்டம்.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்...
இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதன் தொடர் நடவடிக்கையாக, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். செங்கல், சிமென்ட் தொழிற்சாலைகள், பிற கட்டுமானப் பொருள்கள் தயாரிப்பு அதிகமாகும். அத்துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' என இவ்வாறு மோடி தெரிவித்தார்.

104 வயது பாட்டி...
இந்த நிகழ்ச்சியில், தன் வீட்டில் இருந்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 104 வயது குன்வர் பாய் என்ற மூதாட்டியையும் மோடி கௌரவித்தார். தாம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்வர், தன்னிடம் இருந்த 8 ஆடுகளை விற்று, தனது வீட்டில் இரண்டு கழிப்பறைகளைக் கட்டியுள்ளார்.

வேண்டுகோள்...
குன்வருக்கு சாலை அணிவித்து கௌரவித்த மோடி, பின்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது, ‘தன்னைப் பற்றி அதிகம் செய்தி வெளியிடாமல், இந்த மூதாட்டி குறித்து செய்தி வெளியிட்டு, அவர் செய்துள்ள நற்செயலை தேசம் அறியச் செய்யுங்கள்' எனவும் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டார் மோடி.

மாற்றத்திற்கான உதாரணம்...
மேலும், ‘ சத்தீஸ்கரில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் இந்த மூதாட்டி தொலைக்காட்சி பார்ப்பது இல்லை; செய்தித்தாள்களையும் வாசிப்பது இல்லை. எனினும், துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட வேண்டும் என்ற தகவல் அவரை எப்படியோ சென்றடைந்துள்ளது. நாடு மாற்றமடைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இவர் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்' என மோடி அம்மூதாட்டியை பாராட்டினார்.

சின்னப்பொண்ணு...
வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது, பெண்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த சின்னப் பொண்ணுவின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications