11 நாளுக்கு பிறகு லோக்சபாவில் காலடி எடுத்து வைத்த மோடி.. ரூபாய் அறிவிப்பு பற்றி பேச முடியாமல் போச்சே
டெல்லி: பணம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இன்று லோக்சபாவிற்கு வருகை தந்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அமளியால் அவர் எதையும் பேச முடியவில்லை.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 16ம் தேதி தொடங்கியது. கடந்த 8ம் தேதி மோடி வெளியிட்ட பண மதிப்பிழப்பு அறிவிப்பால் மக்கள் பாதிப்படைவதாகவும், அதுகுறித்து மோடி லோக்சபா, ராஜ்யசபாவில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர் தர்ணா நடத்தினர். இதனால் அலுவல்கள் நடைபெறவில்லை., அமளிக்கு நடுவே அரசு நேற்று லோக்சபாவில் வருமான வரி சட்டத்தை நிறைவேற்றியிருந்தது.
இந்நிலையில் மோடி இன்று குளிர்கால கூட்டத்தொடரில் முதல் முறையாக லோக்சபாவுக்கு வந்தார். விடுமுறை தினங்களை கழித்து பார்த்தால் 11 நாள் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் வருகை தந்தது இதுதான் முதல் முறை. ஆனால் எதிர்க்கட்சிகள் தீவிரவாதிகள் காஷ்மீரி ல் நேற்று நடத்திய தாக்குதல் குறித்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதால் அவை பல முறை ஒத்தி வைக்கப்பட்டு, பிறகு, நாள் முழுக்கவுமே ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து இன்று மோடி லோக்சபாவில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் அது நடக்கமால் போய்விட்டது. நாளை அவை கூடியதும், ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிறகு மோடி பணம் அறிவிப்பு குறித்து பேசுவார் என தெரிகிறது.