மலேசிய விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்
டெல்லி: மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்த தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் மலேசியாவின் எம்ஹெச்17 என்னும் 777 போயிங் ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் 295 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அவ்விமானப் பாதையில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் விமானமும் பயணிக்க இருந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளன. பிராங்போர்ட்டில் இருந்து அவ்வான்வழிப்பாதையில் பறக்க இருந்த மோடியின் விமானம், இந்த சம்பவத்தின் காரணமாக வழி மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் 295 பேரின் உயிரைப் பறித்த இக்கொடூரமான சம்பவத்திற்கு நரேந்திர மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தியர்கள் அனைவரும் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
"நம்முடைய எண்ணங்களும், வேண்டுதல்களும் இவ்விபத்தில் தங்கள் உயிரினை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்" என்று தன்னுடைய செய்தியில் மோடி தெரிவித்துள்ளார்.