3 தங்க முதலீட்டுத் திட்டங்கள்... மோடி தொடங்கி வைத்தார்
டெல்லி: பிரதமர் மோடி இன்று தங்கப்பத்திரம் திட்டம், தங்க டெபாசிட் திட்டம் உள்ளிட்ட மூன்று திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அப்போது இத்திட்டத்தின் மூலம் நாட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 20 ஆயிரம் டன் தங்கம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த விழாவில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார். தங்கத் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய மோடி கூறியதாவது:
"தங்க திட்டங்கள் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டவை. ஆண்டுதோறும் 1000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. 20 ஆயிரம் டன் தங்கம் இந்தியாவில் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது. அப்படி இருந்தும் நாம் ஏன் ஏழையாக இருக்க வேண்டும்?, இதனை வெளிக்கொணரும் போது இனியும் இந்தியா ஏழை நாடாக இருக்காது. பயனற்று இருக்கும் தங்கங்களை வெளிக் கொண்டு வரவே இந்த திட்டங்கள் துவக்கப்படுகிறது.
நாட்டில் பெண்கள் அதிகாரம் படைத்தவராய் விளங்க தங்கம் முக்கிய காரணியாக விளங்குகிறது. தங்கத்தால் பெண்களுக்கு குடும்பங்களில் மரியாதையும், அதிகாரமும் கிடைக்கிறது தங்கத்தை பெண்களின்முன்னேற்றத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
தங்கத்தின் மீதான ஆசைகளில் இருந்து மக்களை வெளியே கொண்டு வருவது கடினம் என்றாலும் அதன் மீதான மோகத்தை மக்கள் குறைக்க வேண்டும். நாட்டில் இது போன்று தங்கத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றி பெற்றால் அதன் முழு வெற்றியும் பெண்களையே சேரும். இதில் பெண்களுக்கு தான் அதிக பங்கு உள்ளது.
மேலும், காகித வடிவில் தங்கம் சேமிப்பதன் மூலம் திருட்டை தடுக்க முடியும். எனவே இந்தியாவை தங்க மயமாக்க அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இத்த்ட்டத்தில் தங்க நகை தயாரிப்பவர்களை முகவர்களாக நியமிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், அவர்களே மாற்றத்தை கொண்டு வர காரணமாக அமைவார்கள் என்றும் அவர் கூறினார்.
தங்க பத்திரம், தங்க டெபாசிட், தங்க நாணயம் வெளியீடு உள்ளிட்ட 3 திட்டங்களையும் மோடி இன்று துவக்கி வைத்தார். தங்க டெபாசிட் திட்டத்தில் 2.25 சதவீத வட்டி கிடைக்கும் .தங்க டெபாசிட் திட்டத்தில் 30 கிராம் முதல் 2 கிலோ வரை டெபாசிட் செய்ய முடியும்.
தங்க பத்திர திட்டம்
2 கிராம் தங்க சேமிப்பு பத்திரம் முதல் 500 கிராம் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டத்தில், பத்திரங்கள், வங்கிகளிலும், சில குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கிடைக்கும். இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். அதன்பிறகு, எத்தனை கிராம் தங்க பத்திரம் எடுத்துள்ளோமோ, அதை தங்கமாகவோ அல்லது பணமாகவோ திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். பணமாக பெற்றால் மட்டுமே, அதற்கு வரி விதிக்கப்படும். தங்கமாக பெற்றால், வரி கிடையாது. முதிர்வு காலத்தில், தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தாலும், நாம் முதலீடு செய்த தங்கம் அப்படியே கிடைக்கும்.
தங்க டெபாசிட் திட்டம்
இத்திட்டம், 1999-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தங்க டெபாசிட் திட்டத்துக்கு மாற்றாக அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும், தங்க டெபாசிட் திட்டம் முதிர்வடையும் வரை, அதில் பழைய வாடிக்கையாளர்கள் தொடரலாம். ஒரே நேரத்தில் குறைந்தபட்சமாக 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்யலாம். அது, கட்டியாகவோ, நாணயமாகவோ, நகையாகவோ இருக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்சவரம்பு கிடையாது.
அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம்
இந்திய தங்க நாணயம் மற்றும் தங்கக்கட்டி திட்டத்தில் உள்நாட்டிலேயே அச்சிடப்பட்ட முதலாவது தேசிய தங்க நாணயம். ஒரு பக்கம், அசோக சக்கரமும், அடுத்த பக்கம் மகாத்மா காந்தி உருவமும் பொறிக்கப்பட்டு இருக்கும். முதலில், 5 கிராம் மற்றும் 10 கிராம் எடையுள்ள தங்க காசுகள் விற்கப்படும். பிறகு, 20 கிராம் தங்க கட்டியும் விற்கப்படும். போலி காசு தயாரிக்க முடியாத அளவுக்கு, அவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். 24 காரட் தூய்மையுடன் இருக்கும். ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்டு இருக்கும்.












Click it and Unblock the Notifications