ஒரு நாளைக்கு 1.62 கோடி ரூபாய்.. பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு ஆகும் செலவு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் எஸ்பிஜி பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு 1.62 கோடி ரூபாய் செலவு ஆவது தெரியவந்துள்ளது.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கடந்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டப்படி எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை( கருப்பு பூனைப்படை) இனி பிரதமர் பதவியில் உள்ளவர்களுக்கு (பிரதமர் மோடிக்கு) மட்டும் தான் அளிக்கப்படும். மற்றவர்களுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த எம்பி தயாநிதி மாறன் லோக்சபாவில் எஸ்பிஜி பாதுகாப்பு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தற்போது உள்ள வீரர்களின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
பாதுகாப்பு காரணம்
இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி கிஷான் ரெட்டி பதில் அளித்தார். அவர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்து பேசுகையில் எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமரை மட்டுமே பாதுகாக்கிறது, பாதுகாப்பு காரணங்களுக்காக எத்தனை பாதுகாவலர்கள் என்ற விவரங்களை வெளியிட முடியாது. இதேபோல் விஐபிக்களை பாதுகாக்கும் சிஆர்பிஎப் வீரர்களின் விவரம் குறித்தும் பாதுகாப்பு காரணங்களுக்கான வெளியிட முடியாது என்றார். எனினும் சிஆர்பிஎப் வீரர்கள் நாட்டில் 56 முக்கிய விஐபிக்களை பாதுகாக்கிறார்கள் என்றார்.
10 சதவீதம் அதிகம்
2020-21 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், சிறப்பு கமாண்டோக்கள் 3,000 பேர் கொண்ட எஸ்பிஜிக்கு செய்யப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் தயாநிதி மாறன் எழுப்பிய இந்த கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. உயரடுக்கு எஸ்பிஜி படைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 592.55 கோடியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளார். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10 சதவீதம் அதிகம் ஆகும்.
சோனியாகாந்தி குடும்பம்
கடந்த ஆண்டு எஸ்பிஜி சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர், நான்கு விஐபிகளின் பாதுகாப்பிற்கு உயரடுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு பொறுப்பு வகித்தது. அதாவது பிரதமர் மோடி மட்டுமில்லாமல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குழந்தைகள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா. ஆகிய நான்கு பேருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
மோடிக்கு மட்டும் 592 கோடி
இந்நிலையில் 2019-20 ஆம் ஆண்டில் நான்கு விஐபிக்களை பாதுகாக்க எஸ்பிஜிக்கு பட்ஜெட்டில் 540.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி ஒரு தனிநபரை பாதுகாக்க ஆகும் செலவு ரூ .135 கோடி, அதாவது பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி உள்ளடக்கிய நான்கு விஐபிகளைப் பாதுகாப்பதற்கான சராசரி செலவு தலா ரூ .135 கோடி. ஆனால் இப்போது ரூ. 592.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடிக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு என்பதால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 340 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது தினமும் பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்புக்கு 1.62 கோடி ரூபாய் செலவு ஆகும்.