எதிர்க்கட்சிகளை நான் எதிரியாக நினைத்ததே இல்லை.. நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி
டெல்லி: எதிர்க்கட்சிகளை எதிரிகளாக கருதவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். தேர்தலையொட்டி பல டிவி சேனல்களுக்கு பிரதமர் சிறப்பு பேட்டிகள் அளித்து வருகிறார். 2 வாரங்களில் 40க்கும் மேற்பட்ட நேர்காணல்களை மாரத்தான் போல கொடுத்துள்ளார் மோடி.
இந்தநிலையில், என்டிடிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: எதிர்க்கட்சிகளை எதிரிகளாக பார்க்கவில்லை. அவர்களின் அனுபவத்தை குறைத்து மதிப்பிடுவதில்லை. அவர்கள் 60-70 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுள்ளனர், அவர்கள் செய்த நல்ல பணிகளில் இருந்து பாடம் கற்க விரும்புகிறேன் என்றார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வரவேற்ற மோடி, அவர்களின் பங்களிப்பு மற்றும் அனுபவத்தை மதிப்பதாகவும் தனது பேட்டியில் தெரிவித்தார்.

பேட்டியின் போது, பாஜக தலைமையிலான அரசு விரைவில் காலாவதியாகும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதற்கு மோடி பதிலளித்தார். தற்போதைய அரசாங்கம் ஜூன் 4 ஆம் தேதி முடிவடையும், அதன் பிறகு பாஜக தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று மம்தாவிற்கு கிண்டலாக பதிலளித்தார் மோடி.
சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டரின் டச் டவுன் புள்ளிக்கு சிவசக்தி என்று பெயரிடும் முடிவு தனித்துவமிக்கது. இந்த பெயர் 140 கோடி இந்தியர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களைப் போலல்லாமல், இது பாரதத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அரசின் சாதனைகளை சுய லாபத்திற்கு பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளித்த மோடி.. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 1998ல் நடத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனைகளை உதாரணமாகக் காட்டி, இந்தியாவின் சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்ட, நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்து அரசியல் ஆற்றலை முன்னிறுத்தி அப்போது இந்தியா அணுகுண்டு சோதனைகளை மேற்கொண்டதாக மோடி எடுத்துரைத்தார்.
2019 இல் சந்திரயான் 2 பணியின் தோல்வியின் போது விஞ்ஞானிகளுக்கு தனது தலைமையிலான அரசு ஆதரவாக நின்றதையும் அவர் குறிப்பிட்டார், நாட்டின் அறிவியல் சமூகத்திற்கு ஆதரவாக நிற்பதற்கான தனது உறுதிப்பாடு தொடரும் என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications