2 எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரு எருமையை பறித்துக்கொள்வார்கள்.. பிரதமர் மோடி பேச்சு
காந்திநகர்: உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் என குஜராத்தில் மாடுகள் வளர்க்கும் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. 2வது கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி 94 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். குஜராத்தின் பனஸ்கந்தா பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது பால் பண்ணை தொழில். அங்கு கிராமப்புற விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா பகுதி கிராமப்புற மக்களின் முக்கிய வருமானம் மற்றும் வாழ்வாதாரமாக பால் பண்ணை தொழில் உள்ளது. இந்நிலையில், அங்கு பேசிய பிரதமர் மோடி, உங்களிடம் 2 எருமை மாடுகள் இருந்தால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு எருமை மாட்டை உங்களிடம் இருந்து பறித்துவிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 55% பரம்பரை வரி விதிக்கப்படும். உதாரணமாக, உங்களிடம் 10 ஏக்கர் நிலம் இருந்தால், அதை உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் ஒப்படைக்க விரும்பினால், அதில் பாதியை அரசு கையகப்படுத்தும். அதேபோல, உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால், அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல நீங்கள் விரும்பினால், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அதில் ஒரு எருமை மாட்டை அரசு பறித்துவிடும்" என்று காங்கிரஸ் கட்சியை தாக்கிப் பேசியுள்ளார் மோடி.
மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இது எனது சவால். அவர்களுக்கு தைரியம் இருந்தால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக அறிவிக்கட்டும். அரசியலமைப்பை சிதைக்க மாட்டோம் என்று அவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும்." எனப் பேசினார்.
மேலும், பாஜக அரசை குறிவைத்து காங்கிரஸ் கட்சி போலியான வீடியோக்களை பரப்பி வருவதாகவும், மேலும் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) ஆகியோருக்கான ஒதுக்கீட்டைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் மோடி குற்றம் சாட்டினார். மேலும், தான் உயிருடன் இருக்கும் வரை, நாட்டில் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்றும் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 60 வருடங்கள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி போலியான தொழிற்சாலையாக மாறிவிட்டது. அன்புக் கடை என்று அவர்கள் அழைத்தது உண்மையில் ஒரு போலி தொழிற்சாலை. காங்கிரஸின் வீடியோக்கள் போலியானவை, அதன் வார்த்தைகள் போலியானவை, காங்கிரஸின் வாக்குறுதிகள் போலியானவை, காங்கிரஸின் முழக்கங்கள் போலியானவை, காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் போலியானவை என்று மோடி சாடியுள்ளார்.











Click it and Unblock the Notifications