ஆப்கான் பிரச்சனையில்.. பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும்.. எல்லை காந்தி பேத்தி கோரிக்கை
கொல்கத்தா: ஆப்கானிஸ்தானில் நடக்கும் அரசியல் மாற்றங்களையும், அங்கு தாலிபான் பெற்ற வெற்றி மீதும் இந்திய பிரதமர் மோடியும் உலக தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் கான் பேட்டி அளித்துள்ளார்.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்றுள்ளது. நேற்று முதல்நாள்தான் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியது. அதிபர் அஷ்ரப் கானி பதவி விலகியதை அடுத்து ஆப்கான் தாலிபான் வசம் சென்றுள்ளது.

இந்த நிலையில் ஆப்கான் விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானில் வாழும் இந்திய இஸ்லாமியர்களின் உறவினர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அங்கு வசிக்கும் இந்தியர்களின் உறவினர்களை அரசு பாதுகாக்க வேண்டும்.
இவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வர வேண்டும். ஆப்கானில் இருக்கும் சொந்தங்களை நினைத்து இந்தியாவில் இருக்கும் அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அங்கு போன் சேவை துண்டிக்கப்பட்டுவிட்டது. அங்கு நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் தங்களால் முடிந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.
மற்றவர்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் ஆப்கான் மக்களின் உறவினர்கள் கடும் பீதியில் உள்ளனர்.அங்கு இருக்கும் மக்களின் நிலை மீது பிரதமர் மோடியும், உலக நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபான்கள் அந்த நாட்டின் மைந்தர்கள் இல்லை. அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் இப்படி அவர்கள் ஆயுதங்களை வைத்து ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் சுதந்திரம் இல்லை. கட்டாய திருமணம் நடக்கிறது. இது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது.
Recommended Video
அங்கு கடந்த 40 முதல் 50 வருடமாக போர் நடந்து வருகிறது. அந்நாட்டு மக்களுக்கு போர் தேவை இல்லை. அவர்களின் குரலை உலக நாட்டுக்குள் கேட்க வேண்டும், என்று எல்லை காந்தி அப்துல் காபர் கானின் பேத்தி யாஸ்மின் நிகர் தெரிவித்துள்ளார். தற்போது கொல்கத்தாவில் வசித்து வரும் இவர் ஆல் இந்தியா பக்தூன் ஜிர்கா இ ஹிண்ட் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications