மணிப்பூர்: பிரதமர் மோடியின் மவுனம் கலைக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் எதிர்க்கட்சிகள்?
டெல்லி: மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர கோரி நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதலே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

4-வது நாளாக முடக்கம்: இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் மீண்டும் முற்பகல் 11 மணிக்கு கூடியது. லோக்சபாவில் பிரதமர் மோடி விளக்கம் தர கோரி எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் வழக்கம் போல முழக்கங்கள் எழுப்பினர். இந்த அமளியால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதிக்க கோரி 51 எம்.பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் முடங்கின.
நம்பிக்கை இல்லா தீர்மானம்?: பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதன் மீது பிரதமர் மோடி பேசித்தான் ஆக வேண்டும்; ஆகையால் இந்த வியூகத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
In today's meeting, I.N.D.I.A parties discuss proposal to move no-confidence motion against govt: Sources https://t.co/EC22lOdE7r
— ANI (@ANI) July 25, 2023
2 கோரிக்கைகள்: இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி கூறுகையில், எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் இரு கோரிக்கைகளைத்தான் முன்வைக்கிறோம். அதில் ஒன்று பிரதமர் மோடி, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது. மற்றொன்று இந்தியா கூட்டணி எம்பிக்கள் கொடுத்த தீர்மான நோட்டீஸை ஏற்று சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்பது. இது ஒன்றும் மணிப்பூர் மாநில பிரச்சனை மட்டுமல்ல.. தேசம் முழுவதற்குமான பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மோடி ஆலோசனை: முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் நிலவரம், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications