நவீன் பட்நாயக்கை விட்டு விளாசிய பிரதமர்! ஆதரவு கொடுத்தா விமர்சிக்க கூடாதா? ஒடிசாவில் சலசலப்பு
புவனேஸ்வர்: ஒடிசாவில் விரைவில் லோக்சபா தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதால், பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தை (பிஜேடி) கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
மாநில கட்சிகளை பாஜக கடுமையாக விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும், ஒடிசா என்று வரும்போது பாஜக கொஞ்சம் அடக்கியே வாசித்து வந்திருக்கிறது. காரணம் பிஜேடிக்கும் பாஜகவுக்கும் இடையே இருந்த கூட்டணிதான். மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், மாநிலங்களவையில் இக்கட்சிக்கு போதுமான பலம் இல்லை. எனவே மசோதாக்களை நிறைவேற்ற கூட்டணி கட்சிகளை நம்பிதான் இருக்கிறது.

இந்த கூட்டணி கட்சிகளில் முக்கியமானதுதான் பிஜேடி. குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் டெல்லி சேவைகள் மசோதா ஆகியவற்றை மாநிலங்களவையில் நிறைவேற்ற பிஜேடி, பாஜகவுக்கு உதவியிருக்கிறது. எனவே இதற்கு பிரதிபலனாக பாஜக, இக்கட்சியை பெரிய அளவில் விமர்சிக்காது.
ஆனால், இந்த தேர்தலில் நிலைமை மாறியிருக்கிறது. பெஹ்ராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவர் பேசியதாவது, “ஒடிசாவை பாருங்கள், அழகான மாநிலம். இங்கு எல்லா வளங்களும் நிறைந்து இருக்கின்றன. நீர், நிலம், கனிமங்கள், சுற்றுலாவுக்கு ஏற்ற நீண்ட கடற்கரை, வரலாறு, கலாச்சாரம் என அனைத்தையும் கடவுள் கொடுத்திருக்கிறார். ஆனால் ஏன் இன்னும் ஒடிசா மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்? இதற்கு காங்கிரசும், பிஜேடியும்தான் பதில் சொல்ல வேண்டும்.
பிஜேடி கட்சியில் சிறிய பதவிகளில் உள்ள தலைவர்கள் கூட பெரிய பெரிய பங்களாக்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒடிசா இளைஞர்கள் வேலைகளுக்காக வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஏன் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறார்கள்? பள்ளிகளில் குழந்தைகளின் இடைநிற்றல் ஏன் அதிகரிக்கிறது?
மத்தியில் சோனியா காந்தியின் ரிமோட் கன்ட்ரோல் காங்கிரஸ் அரசு 10 ஆண்டுகளில் ஒடிசாவுக்கு ரூ.1 லட்சம் கோடியை வளர்ச்சிக்காக கொடுத்தார்கள். ஆனால், நான் ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடியை கொடுத்திருக்கிறேன். பெண்கள் நலனிலும் ஒடிசா அரசு மிக மோசமாக இருக்கிறது.
ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் மாதம் ரூ.6000 தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், பிஜேடி அரசு இந்த திட்டத்தை நிறுத்தியிருக்கிறது. ஜல் ஜீவன் மிஷனுக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி அனுப்பியது. அந்த பணத்தை இங்குள்ள அரசால் செலவிட முடியவில்லை. சாலைகள் அமைப்பதற்கு பணம் கொடுத்திருக்கிறோம். ஆனால் இன்னமும் இங்கு சாலைகள் மோசமான நிலையில்தான் இருக்கின்றன” என கடுமையாக விமர்சனங்களை அடுக்கியிருக்கிறார்.
இது அம்மாநில அரசியல் களத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற அதிமுகவை பாஜக கடுமையாக விமர்சித்த வருகிறது. இப்படி இருக்கையில் பிஜேடி மீதும் விமர்சனங்களை கையில் எடுத்திருப்பது, பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் மற்ற மாநில கட்சிகளிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஒடிசா மாநிலத்தை பொறுத்த அளவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் vs பாஜக vs காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. பாஜகவும் 21 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியை பொறுத்த அளவில், காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications