டிரம்பின் போன்காலில் சரணடைந்த மோடி.. இந்தியா - பாகிஸ்தான் மோதல் நின்றது எப்படி? ராகுல் அட்டாக்
போபால்: இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது டிரம்பிடம் இருந்து வந்த ஒரு போன் காலில் அவரிடம் மோடி சரணடைந்துவிட்டார். அதன்பிறகு தான் மோதல் நிறுத்தப்பட்டது என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும், நம் நாட்டுக்கும் இடையே நடந்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் கதறியபடி நம்மிடம் சரணடைந்தது. பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த அதிகாரி நம் நாட்டிடம் சண்டையை நிறுத்தும்படி கெஞ்சினார். அதன்பிறகு தான் மோதல் என்பது முடிவுக்கு வந்தது.

இந்த யுத்தம் முடிவுக்கு வர பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது தான் முதல் காரணம். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ நாங்கள் தான் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்தோம். அமெரிக்கா தலையிடாவிட்டால் அணுஆயுத போராக கூட மாறியிருக்கும் என்று கூறி வருகிறார்.
டொனால்ட் டிரம்பின் இந்த கூற்றை நம் நாடு முற்றிலுமாக புறம்தள்ளிவிட்டது. அமெரிக்காவின் தலையீடு எதுவுமே இல்லை என்று பலமுறை நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறிவிட்டார். ஆனாலும் டிரம்ப், தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று மார்தட்டி வருகிறார். இதற்கிடையே தான் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ‛சங்கதன் ஸ்ரஜன் அபியான்' என தொழிலாளர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிறுத்தப்பட்டது பற்றி பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி பயப்படுகிறார். அவரிடம் மோடி சரணடைந்துவிட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனக்கு இப்போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை சேர்ந்தவர்களை பற்றி நன்கு தெரியும். அவர்கள் மீது சிறிதளவு அழுத்தம் கொடுத்தால் போதும். அவர்கள் பயந்துவிடுவார்கள். அமெரிக்க அதிபரிடம் இருந்து ஒரு போன் வந்ததுமே மோடி சரணடைந்துவிட்டார்.
டிரம்ப் போன் செய்து ‛மோடி ஜி என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டு ‛நரேந்திரா சரணடையுங்கள்' என்று கூறினார். உடனே மோடி, ‛எஸ் சார்' என சரணடைந்துவிட்டார். டிரம்பின் சிக்னலை மோடி ஏற்கிறார்.
நீங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். 1971ல் பாகிஸ்தானை உடைத்து வங்கதேசம் உருவாக்கப்பட்டது. இந்த போரின்போது அமெரிக்காவின் ஆயுதங்கள், போர் கப்பல்கள் வந்தன. ஆனால் இந்திரா காந்தி பயப்படவில்லை. நான் செய்ய வேண்டியதை செய்து முடிப்பேன் என்று வெற்றி பெற்றார். இதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் வித்தியாசம். சுதந்திரத்துக்கு பின்னால் அவர்கள் (பாஜக) சரண்டர் கடிதம் எழுதி வருகின்றனர். ஆனால் காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்டவர்கள் ஒருபோதும் சரணடைந்தது இல்லை. அவர்கள் சூப்பர் பவருடன் எதிர்த்து போராடினார்கள்.












Click it and Unblock the Notifications