10ம் தேதி பாலஸ்தீனம் செல்லும் மோடி: புதிய வரலாறு படைக்கிறார்
டெல்லி: பிரதமர் மோடி வரும் 10ம் தேதி பாலஸ்தீனம் செல்கிறார். பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணம் செல்கிறார். அவர் பாலஸ்தீனம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீன தலைநகர் ரமல்லா செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் மகமூது அப்பாஸை சந்தித்து பேசுகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் சென்ற மோடி பாலஸ்தீனம் செல்லவில்லை. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு அழைப்பின் பேரில் அங்கு சென்றார்.
வரும் 10, 11 ஆகிய தேதிகளில் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பார். துபாயில் நடக்கும் ஆறாவது உலக அரசுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். முன்னதாக மோடி கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமீரகம் சென்றார்.
மோடி அமீரகம் வருவது இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த உதவும் என்று அமீரகத்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் சுரி தெரிவித்துள்ளார்.