5 நாளுக்கு முன்பே எஸ்பிஜி கன்ட்ரோலில் பெரோஸ்பூர்.. நாங்க எப்படி பொறுப்பாவோம்? முதல்வர் சன்னி கேள்வி
அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை 5 நாட்களுக்கு முன்னரே எஸ்பிஜி தங்கள் கட்டுக்குள் கொண்டு விட்ட நிலையில் பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு எப்படி மாநில அரசு பொறுப்பேற்கும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இந்தியா டுடே நாளிதழுக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி காரில் சென்று கொண்டே அளித்த பேட்டியில் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடியின் பெரோஸ்பூர் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்கும்.
வரும் 3 நாட்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்றார். பாதுகாப்பு குறைபாடு குறித்து புதிய கமிட்டி அமைத்திருப்பது குறித்து பஞ்சாப் முதல்வர் சன்னி பேசிக் கொண்டிருந்த போதே யாரோ சில போராட்டக்காரர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர்.

முதல்வர் சன்னி
இதையடுத்து காரை மெதுவாக இயக்குமாறு தனது ஓட்டுநரிடம் முதல்வர் சன்னி தெரிவித்தார். அவர் மேலும் தனது பேட்டியை தொடர்கையில் இங்கே பாருங்கள். இந்த போராட்டக்காரர்கள் என்னை தடுத்து நிறுத்த விரும்பினார்கள். நிறுத்திவிட்டார்கள். இதற்காக நான் அவர்களை கொன்றுவிட முடியுமா?

காரை நிறுத்தினர்
10 பேர் எனது காரை நிறுத்தினார்கள். ஆனால் பிரதமர் மோடியின் காரை யாரும் தடுத்து நிறுத்தக் கூடவில்லை. அவரது வாகனம் போராட்டக்காரர்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே இருந்தது. போராடுவது என்பது ஜனநாயக உரிமை. இப்போது போராட்டம் நடத்தியவர்கள் அரசின் பல துறைகளை சேர்ந்தவர்கள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்துகிறார்கள்.

நடத்தை விதிகள்
பஞ்சாப் தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்னர் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால்தான அவர்கள் நான் வரும் சாலையை வழிமறித்துள்ளார்கள் என்றார். பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

வழிமறித்த போராட்டக்காரர்கள்
அப்போது முதல்வர் சரண்ஜித், "உங்களுக்கு என்ன வேண்டும்" என கேட்க அதற்கு அவர்கள் "நாளை உங்களை சண்டீகரில் சந்திக்க வேண்டும்" என்றார்கள். "உங்கள் கோரிக்கைகளை நாளை கேட்பதாக நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுவிட்டேன். பின்னர் எதற்காக எனது காரை வழிமறித்தீர்கள்" என முதல்வர் சன்னி கேட்டார். இதற்கு போராட்டக்காரர்கள் "இரு மாதங்கள் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் அப்படி செய்தோம்" என்றனர். இதையடுத்து அவர்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு தனது பேட்டியை முதல்வர் சன்னி தொடர்ந்தார்.

நீண்ட உடல் நலம்
அவர் கூறுகையில் இதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எந்த வகையிலும் நேற்று பெரோஸ்பூரில் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. இன்னும் கேட்டால், அவர் நீண்ட நாள்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். எதுவுமே நடக்காதபோது தான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டவசம் என பிரதமர் ஏன் சொன்னார் என தெரியவில்லை.

பிரதமர் பாதுகாப்புக்கு நாங்கள் எப்படி பொறுப்பு?
பிரதமரின் பாதுகாப்பு என்பது முழுக்க முழுக்க உளவுத் துறை மற்றும் எஸ்பிஜி தொடர்புடையது. அவர்கள்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் பயணம் மேற்கொள்ளும் பகுதிகளை 5 நாட்களுக்கு முன்னரே எஸ்பிஜி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். அப்படியிருக்கும் போது இந்த பாதுகாப்பு குறைபாடு எஸ்பிஜியின் குளறுபடி என ஏன் யாரும் சொல்லவில்லை. பிரதமரின் உயிருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை, போராட்டம் நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே பிரதமரின் கார் நிறுத்தப்பட்ட நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து என எப்படி சொல்ல முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications