மாவோயிஸ்டுகளின் குரலில் பேசும் ராகுல் காந்தி.. முதலீட்டுக்கு அஞ்சும் கார்ப்பரேட்டுகள்- மோடி அட்டாக்!
ஜாம்ஷெட்பூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாவோயிஸ்டுகளைப் போல பேசுவதால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஒரு முறைக்கு 50 முறை யோசிக்கின்றன என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: ராகுல் காந்தி இன்னமும் வாரிசு அரசியலை நம்பிக் கொண்டிருக்கிறார். லோக்சபா தொகுதிகள் என்னவோ தங்களுடைய பரம்பரைச் சொத்து; மூதாதையர் சொத்து என கருதிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி பேசுகிற மொழியும் உச்சரிக்கும் வார்த்தைகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு 50 முறையாவது யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளுகின்றன. மாவோயிஸ்டுகளின் மொழியில்தான், மாவோயிஸ்டுகளைப் போலவே ராகுல் காந்தி பேசுகிறார். "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள மாநிலங்களின் முதல்வர்கள், ராகுல் காந்தியின் கார்ப்பரேட் எதிர்ப்பு பேச்சுக்கு பதில் தர தயாராக உள்ளனரா?
ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, இது என்னுடைய அம்மாவின் தொகுதி என்கிறார். ஒரு 8 வயது குழந்தை கூட இப்படி எல்லாம் பேசுமா?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18,000 கிராமங்களுக்கு இன்னமும் அடிப்படை வசதிகள் கூட செய்துதரப்படவில்லை. இந்த கிராமங்கள் 18-ம் நூற்றாண்டில் எப்படி இருந்தனவோ அப்படித்தான் ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
"இந்தியா" கூட்டணியைப் பொறுத்தவரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்திலும் ராகுல் காந்தியை இலக்கு வைத்தே பிரசாரம் செய்து வருகிறார். ராகுல் காந்திக்கு எதிரான மோடியின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் தலைவர்களும் இடைவிடாமல் பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.
அண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களான அம்பானி- அதானி குழுமங்களை ராகுல் காந்தி விமர்சிக்கவில்லை; டெம்போக்களில் கறுப்பு பணம் பெற்றுவிட்டார் என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார் பிரதமர் மோடி. தற்போது கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளைப் போல பேசுகிறார் ராகுல் காந்தி என பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications