வளர்ச்சின்னா இது தான் வளர்ச்சி பாருங்க மக்களே... சொல்லாமல் சொன்ன பிரதமர் மோடி!
அகமதாபாத்தில் சாலை வழி பயணம் செய்ய பிரதமர் மோடிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில் கடல் விமான போக்குவரத்தை அவர் மேற்கொண்டார்.
Recommended Video
அகமதாபாத் : குஜராத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவையொட்டி அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலை வழி பயணம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் கடல்வழி விமான பயணத்தை இன்று மேற்கொண்டார்.
குஜராத் சட்டசபைக்கான தேர்தல் நாளை மறுதினம் இரண்டாம் கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சாலை வழியாக பேரணி, பிரச்சாரம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலேயே முதன்முறையான கடல் வழியிலான விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார். விமான ஓடுதளம்இன்றி தண்ணீரில் இருந்தே புறப்பட்டு தண்ணீரிலேயே தரையிரங்கலாம் என்பதே இதன் சிறப்பு.
அம்பாஜி கோயிலுக்கு பயணம்
இதன்படி அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் இருந்து தரோய் அணைக்கு பிரதமர் நரேந்திர மோடி கடல் விமானத்தில் பயணம் செய்தார். தரோய் அணை அருகே உள்ள அம்பாஜி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பிரதமர் மீண்டும் அதே விமானத்தில் திரும்பி வருகிறார்.
வளர்ச்சிக்கான அடையாளம்
குஜராத் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் பாஜக அரசின் வளர்ச்சி நடவடிக்கைகளை வெளிக்காட்டுவதற்காகவே இந்த கடல் விமான பயணம் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. குஜராத் தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே அம்பாஜி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளன. இந்நிலையில் பிரதமர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
காங்கிரசுக்கு பதிலடி
தனது பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக பாஜக பிரதமர் மோடியின் இந்த பயணத்தை திட்டமிட்டுள்ளது. குஜராத்தின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஊர் கட்டமைப்பு வசதிகள் எந்த அளவிற்கு தரம் உயர்ந்ததாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதும் தான் இந்த பயணத்தின் நோக்கமாம். சுருக்கமாக சொல்லப்போனால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது தான் இதன் அர்த்தம்.
கடல் விமானத்தின் சிறப்பு என்ன?
சாதாரண சிறிய ரக நிலையான இறக்கைகளைக் கொண்ட நீ்ர்நிலைகளில் தரையிறங்கக் கூடியதும், நீா் நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்று அழைக்கப் படுகினறன. ஒரு படகின் அமைப்பையும் விமானத்தின் அமைப்பையும் இது கொண்டிருக்கும்.விமானத்தின் அடிப்பகுதி தண்ணீரில் மிதப்பதற்கு ஏற்ப படகின் அடிப்பகுதியைக் கொண்டும் வானத்தில் பறப்பதற்கு ஏற்ப சாதாரண விமானங்களைப் போன்ற இரண்டு இறக்கைகளைக் கொண்டும் வடிவைமக்கப்பட்டிருக்கும்.