மோடிஜி! உங்களுக்கு என் மீது பொறாமையா?.. காங்கிரஸ் தலைவர் சித்து
அமிருதசரஸ்: பாகிஸ்தானில் இம்ரான் கான் பதவியேற்பு விழாவுக்கு உங்களை அழைக்காமல் என்னை அழைத்ததற்கு பொறாமையா என பிரதமர் நரேந்திர மோடிக்கு நவ்ஜோத் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு சென்றிருந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சித்து அந்த நாட்டு ராணுவ தளபதி கமார் ஜாவித் பாஜ்வாவை கட்டிப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்தது. கேள்விகளால் காங்கிரஸ் கட்சியை துளைத்தெடுத்தது. இதையடுத்து டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது.
அப்போது அவர் தென்னிந்தியாவை விட பாகிஸ்தானுக்கு செல்வது தமக்கு வசதியாக உள்ளது என்று சித்து பேசியிருந்தார். இதையடுத்து இம்ரான் கான் அமைச்சரவையில் இணைந்து விட வேண்டியதுதானே என பாஜக விமர்சனம் செய்தது. இது குறித்து சித்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்று பிரதமருக்கு பொறாமையா. கோத்ரா கலவரத்தின் மூலம் பெயர் பெற்றவர்களிடம் நான் எனது தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.