வெள்ள பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்டு வரும்.. நம்பிக்கையுள்ளது: மோடி பேச்சு
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்களுடன் ரேடியோவில் உரையாடும் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது, ஆல் இந்தியா ரேடியோ மற்றும், தூர்தர்ஷன் மூலம், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம், மக்களிடம் உரையாடிவருகிறார்.
இதன் 14வது நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரிடம் சந்தேகம் கேட்க விரும்புவோர்கள், 180030007800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அதையொட்டி பலரும் கேள்விகளை அனுப்பியிருந்தனர்.

மோடி கூறியதாவது: உலகில் தட்ப வெட்ப மாறுபாடு வேகமாக ஏற்பட்டுவருவதை நாம் உணர தொடங்கியுள்ளோம். இந்தியாவில் கூட காலம் கடந்து மழை பெய்கிறது. அதுவும் தொடர்ச்சியாக அதிக அளவுக்கு பெய்கிறது. தற்போது தமிழ்நாடு அதற்கு உதாரணம்.
விழாக்காலங்கள் மீது மக்கள் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விழாக்கால நேரத்தில் மக்கள் நெருக்கடியில் சிக்கியது சோகத்தை மேலும் கூட்டியது. தமிழகத்தில் மத்திய மீட்பு குழு ஆய்வு நடத்திவருகிறது. வெள்ள சேதத்தில் இருந்து, தமிழகம் மீண்டுவரும். தமிழ்நாட்டின் பலத்தின் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது.
நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்ப சேதத்தை தொடர்ந்து, இயற்கை பேரிடரை சமாளிக்க சார்க் நாடுகள் இணைந்து, செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே யோசனை கூறியிருந்தேன். அதை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
கடந்த மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, நான், உடல் உறுப்பு தானம் பற்றி பேசியிருந்தேன். இதையடுத்து, உறுப்பு தானம் தொடர்பான, NOTTO அமைப்பின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரித்துள்ளதாம். அவ்வமைப்பின் வெப்சைட்டை பார்ப்போர் எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாம்.
உறுப்புகளை தானம் செய்யும்போது, அந்த உறுப்பு மட்டுமின்றி, மற்றொரு உடலும் புதிய வாழ்க்கையை பெறும் என்பதை உணர வேண்டும்.
Mygov.in வெப்சைட் மூலமாக, NOTTO-வுக்கு லோகோ தயாரிக்கும் போட்டி நடத்தியுள்ளோம். உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்தை உணருங்கள்.
டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாகும். மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நமது நாடு பரந்து விரிந்தது. அனைத்து தேவைகளுக்கும் அரசையே எதிர்பார்க்கிறோம். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் ஈடற்ற உழைப்பை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications