பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மறைவு
அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தனது தாயார் மறைவு குறித்து பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. 100 வயதான ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதரருமான பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார்.
பிரதமர் மோடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவதுண்டு.

உடல்நலக் குறைவு
100 வயதான ஹீரா பென் மோடிக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயாரின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி உடனடியாக நேற்று முன் தினம் அகமதாபாத் சென்றார்.

உடல்நலம் தேற வேண்டும்..
தாயார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடமும் விசாரித்தார். ஹீராபென் மோடியின் உடல் நலனில் முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியின் தாயார் உடல் நல தேற வேண்டு என்று ராகுல் காந்தி உள்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

ஹீராபென் மோடி காலமானார்
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். இது தொடர்பாக ஹீராபென் மோடி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹீராபென் மோடி இன்று அதிகாலை 3.39 மணியளவில் காலமானார்' எண்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் இறந்த செய்தியை தனது ட்விட்டரில் பிரதமர் மோடி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி உருக்கம்
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது துறவியின் பயணம் போன்று அவரது வாழ்க்கை இருந்தது. அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தாயார் மறைவு செய்து அறிந்ததும் பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபாத் புறப்பட்டுள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் இரங்கல்
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், குஜராத் முதல்வர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். அதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications