மோடியை சந்திக்க வைப்பதாக கூறி தமிழக விவசாயிகளை ஏமாற்றிய டெல்லி போலீஸ்!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழக விவசாயிகள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைப்பதாக கூறி டெல்லி போலீசார் ஏமாற்றி விட்டனர் என்று அய்யாகண்ணு வேதனை தெரிவித்தார்.
டெல்லி: கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28-ஆவது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திக்க வைப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாக அய்யாகண்ணு வேதனை தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் 27 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

விவசாயிகள் உறுதி
இதனால் எலிக்கறி, பாம்புக்கறி உண்பது, மொட்டை அடித்தல், சாலையில் உருளுதல், பிளேடால் கையில் கிழித்தல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை வரவேற்ற விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற கடனை ரத்து செய்யும் வரை உயிரே போனாலும் தமிழகம் திரும்ப மாட்டோம் என்று உறுதியாக இருந்தனர்.

பிரதமரை சந்திப்போம்
இதனிடையே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர். இந்நிலையில் போராட்ட குழுவை சேர்ந்த விவசாயிகள் 28 பேர் கடந்த 2 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அப்போது திங்கள்கிழமை மோடியை சந்திக்க தாங்களே செல்ல உள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்தார்.

பொய் சொன்ன போலீஸ்
இந்த நிலையில் விவசாயிகளின் போராட்ட களத்துக்கு வந்த டெல்லி போலீஸார், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைப்பதாக அய்யாகண்ணு உள்ளிட்ட 7 பேரை அழைத்து சென்றனர். ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஒரு செயலாளரை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனரே தவிர பிரதமரை சந்திக்கவிடவில்லை.

நிர்வாண போராட்டம்
பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்து சென்றுவிட்டு சந்திக்கவிடாமல் ஏமாற்றியதால் விவசாயிகள் திடீரென முழு நிர்வாணப் போராட்டம் நடத்தினர். இதனால் டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications