நித்தியானந்தாவுக்கு நடந்த ஆண்மை சோதனை அறிக்கையை தர டாக்டர்கள் தாமதித்தது ஏன்?
பெங்களூர்: பலாத்கார வழக்கில் சாமியார் நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை முடிவுகளை சிஐடி போலீசாரிடம் நேற்றிரவுதான் டாக்டர்கள் அளித்தனர். எனவே நேற்று அந்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியவில்லை. காலதாமதத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், கோர்ட் அனுமதியளித்தை தொடர்ந்து நித்தியானந்தா சாமியாரிடம் கடந்த 8ம்தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. சிஐடி போலீசார் ஏற்பாட்டின் பேரில் பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை
விக்டோரியா மருத்துவமனை தலைவர் துர்க்கண்ணா தலைமையில் 6 பேர் கொண்ட டாக்டர் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது. ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளுக்கு நித்தியானந்தா உள்ளானார்.

ஒத்துழைப்பு தரவில்லை
அதே நேரம் விந்தணு பரிசோதனை போன்றவற்றை செய்ய முயன்றபோது, தனக்கு நெஞ்சுவலி இருப்பதால், சுய இன்பம் செய்தால் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று கூறி டாக்டர்களுக்கு நித்தியானந்தா ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார்.

குரல் சோதனை
இதன்பிறகு மடிவாளா பகுதியிலுள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் அவரது குரல் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை அறிக்கையை சிஐடி போலீசாரிடம் டாக்டர்கள் குழு கடந்த வார இறுதியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆனால் அறிக்கையில் எந்த டாக்டர் கையெழுத்திடுவது என்பதில் ஏற்பட்ட இழுபறியால் அறிக்கையை அளிப்பதிலும் காலதாமதம் ஆனது.

டாக்டர்களுக்குள் சர்ச்சை
சோதனை அறிக்கையில் கையெழுத்திடும் டாக்டர்கள், நித்தியானந்தாவுடனான வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்ற அச்சத்தால் டாக்டர்கள் கையெழுத்திட மறுத்துவந்ததாக தகவல் வெளியாகியது. கட்டாய சோதனை செய்தால் வழக்கு தொடருவேன் என்று நித்தியானந்தா டாக்டர்களிடம் தெரிவித்ததும் அவர்கள் அச்சத்துக்கு காரணமாம். இறுதியில், துர்க்கண்ணா உட்பட அனைத்து டாக்டர்களும் கையெழுத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

காலதாமதம்
இந்த இழுபறி காரணமாக டாக்டர்கள் குழு நேற்றிரவுதான் சிஐடி போலீசாரிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. எனவே நேற்று ராம்நகர் கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த சிஐடி போலீசாரால் உரிய நேரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை. இன்று அல்லது நாளை, கோர்ட்டில் சிஐடி போலீசார் அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் டாக்டர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை என்று துர்க்கண்ணா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications