சாலையை மறித்து, டயரை எரித்து போராட்டம் நடத்திய போலீசார்: பெங்களூர் ஸ்தம்பிப்பு
பெங்களூர்: காபி குடிக்க வந்த பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரிக்கு ஆதரவாக போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் பெங்களூர் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காபி ஷாப்புக்கு வந்த பெண்களை அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனில் படம் எடுத்ததாக கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின் ஏ.டி.ஜி.பியாக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரநாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரவீந்திரநாத்தின் பெயரை எப்.ஐ.ஆரில் போலீசார் சேர்க்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்து டிஜிபியிடம் கடிதம் அளித்தார்.

ரவீந்திரநாத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்காத அரசு, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் அதிகாரிக்கு அரசு ஆதரவாக செயல்படுவதாக மீடியாக்கள் விமர்சனம் செய்துவரும் நிலையில், நேற்று மாலை திடீரென ரிசர்வ் போலீசார் பெங்களூரில் சாலை மறியலில் இறங்கினர். நேற்று இரவு 7 மணிக்கு ரிசர்வ் போலீசாரின் குடியிருப்பு அமைந்துள்ள ஆடுகோடி சர்க்கிளில் சாலையை மறித்தும், ரோட்டில் டயரை போட்டு தீவைத்து எரித்தும் போலீசாரும், அவர்கள் குடும்பத்தாரும் போராட்டம் நடத்தினர்.
தங்களது 'பாஸ்' ரவீந்திரநாத்தை வேண்டுமென்றே நகர போலீஸ் கமிஷனர், ராகவேந்திர அவுராத்கர் பழிவாங்குவதாக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். மேலும், போலீஸ் கமிஷனர் நேரில் வந்து ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தை விளக்கினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். தகவல் அறிந்ததும், போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். ஆனால் சக போலீசாரே போராட்டம் நடத்துவதால் அவர்களை வலுக்கட்டாயமாக அகற்ற முடியாமல் சட்டம்-ஒழுங்கு போலீசார் கைகளை பிசைத்தபடி நின்றனர்.
இதனிடையே தகவல் அறிந்து கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின் டிஐஜி சோனியா, ஐஜிபி மாலினி ஆகியோர் வந்து சமாதானப்படுத்திபார்த்தனர். தங்களது உயர் அதிகாரி கூறியும் போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் கலைந்துபோக மறுத்துவிட்டனர். இதன்பிறகு ரவீந்திரநாத் அங்கு வந்து சமாதானம் செய்தபிறகே அவர்கள் கலைந்து சென்றனர். போக்குவரத்தையும், சட்டம்-ஒழுங்கையும் சீர் செய்யவேண்டிய போலீசாரே போராட்டத்தில் இறங்கியதால் பொதுமக்கள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

பொதுமக்கள் பலரும் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால், வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெங்களூரில் இருந்து தமிழகம் செல்லும் பஸ்கள், பிற வாகனங்களும் நெருக்கடியில் சிக்கி தவித்தன. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கூட போராட்டக்காரர்கள் வழிவிட மறுத்ததால் மக்களின் கோபத்துக்கு போலீசார் உள்ளாகினர். ஒசூர் சாலை மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர். கோரமங்களா, சர்ஜாப்பூர்ரோடு, எலக்ட்ரானிக்சிட்டி செல்வோர்தான் கடுமையான பாதிப்பை சந்தித்தனர். இரண்டு கிலோமீட்டர் தூரத்தை கடக்க வாகன ஓட்டிகளுக்கு இரண்டு மணி நேரம் ஆகியது.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், "காவல்துறையின் ஒழுங்கீனத்தை இந்த அரசு சகித்துக்கொள்ளாது. போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நடந்த சம்பவம் குறித்து டிஜிபி அரசுக்கு அறிக்கையளித்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது" என்றார். இதனிடையே ரவீந்திரநாத் வகித்து வந்த ரிசர்வ் போலீஸ் ஏடிஜிபி பதவியிலிருந்து அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த ஐபிஎஸ் அதிகாரி மேகரிக்கிற்கு இந்த பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மேகரிக்கிற்கு முழு அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications