5 ஆண்டுகளாக பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. குஜராத் அமைச்சர் மீது பாலியல் புகார்! வெடித்த சர்ச்சை
காந்திநகர்: குஜராத் மாநில அமைச்சர் மஹ்மதாவத் அர்ஜுன் சிங் சவுகான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரால் குஜராத் அரசியலில் சர்ச்சை வெடித்துள்ளது.
குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. புபேந்திர படேல் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சட்டசபை தேர்தல் பணிகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துவங்கி உள்ளன.
இந்நிலையில் தான் குஜராத்தில் அமைச்சராக உள்ள பாஜகவின் எம்எல்ஏ மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் ஒரு பெண்ணை மிரட்டி 2016 முதல் 2021 வரை பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்துள்ளது குஜராத் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
பாலியல் குற்றச்சாட்டு
குஜராத்தில் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் அர்ஜுன்சிங் சவுகான். இவர் மஹ்மதாவத் சட்டசபையில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன நிலையில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அர்ஜுன் சிங் சவுகான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போலீசில் புகார்
இந்த குற்றச்சாட்டை அர்ஜுன் சிங் சவுகானின் சட்டசபை தொகுதிக்குள் ஹால்தார்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் கூறியுள்ளார். ஹால்தார்வாஸ் கிராம பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் தான் பாலியல் குற்றச்சாட்டைகூறியுள்ளார். அதாவது அமைச்சர் அர்ஜுன் சிங் சவுகான் தனது மனைவியை மிரட்டி 5 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததாக அவர் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
பழக்கம் எப்படி?
இதுதொடர்பாக அவர் புகாரில் கூறப்பட்டுள்ளது: ‛‛என் மனைவிக்கும் அர்ஜுன்சிங்குக்கும் கடந்த 2015ல் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு என் மனைவியை தாலுகா பஞ்சாயத்து வேட்பாளராக அவர் முன்மொழிந்தார். இதில் என் மனைவி வெற்றி பெற்றார். 2016 முதல் 2021க்கு இடையே அர்ஜுன் சிங் ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் மனைவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தனியே அடைத்து வைத்து கொடுமை
கொரோனா கால லாக்டவுனில் எனது மனைவியை ஒன்றரை மாதங்கள் தனியே அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளார். மேலும் ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி அவரை அழைத்து சீரழித்துள்ளார். மேலும் மாவட்ட தலைவரும் எனது மனைவியை மிரட்டியுள்ளார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணை
இந்த புகாரை போலீசார் பெற்று கொண்டுள்ளனர். இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛புகார் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை துவங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.