அமித் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் தாய்.. 2 வயது குழந்தையை கொன்று தற்கொலை செய்த தாய்
புணே: மாமியார் கொடுமை தாள முடியாமல் தனது 2 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புணே ஹடப்சர் போலீஸ் காலனியை சேர்ந்தவர் அமித் காம்ளே. இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜான்வி (22). இவர்களுக்கு ஷிவான்ஸ் என்ற 2 வயது மகன் இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கணவர் வேலைக்கு சென்ற பின்னர் ஜான்வி திடீரென தனது மகன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஜான்வி எழுதிய தற்கொலை கடித்ம சிக்கியது. அதில் அமித் நீங்கள் என்னை அதிகம் நேசிக்கிறீர்கள். ஆனால் உங்கள் தாய் சுஜாதாவால் வாழ்க்கையில் நான் வெறுப்படைந்துவிட்டேன்.
அவர் என்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார். எனவே எனக்கு வாழ பிடிக்கவில்லை என உருக்கமாக ஜான்வி கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.