காஷ்மீரில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்: காவலர் ஒருவர் பலி; இருவர் காயம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியாகியதாகவும், இருவர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ஜம்னகிரி போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு பின்னர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் போலீசார் ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் போலீஸ், மற்றொருவர் அப்பகுதியை சேர்ந்தவர். காவல்நிலையத்தில் இருந்து ஆயுதங்களை பயங்கரவாதிகள் திருட வந்திருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஜாவிட் கிலானி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் போலீசார் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது.
போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 83 பேர் உயிர் இழந்தனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்ததால் 70 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பதற்றம் தணிந்து இயல்புநிலை திரும்பியதை அடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.