பாஜக மாண்டது மாண்டதுதான்.. உயிர்த்தெழாதோ? சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி- சர்வே ரிசல்ட்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறது Political Critic நிறுவனத்தின் கருத்து கணிப்பு.
90 சட்டசபை தொகுதிகளைக் கண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள்.

2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பாஜக வெறும் 14 இடங்களிலும்தான் வென்றது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் அசைக்க முடியாத ஆட்சியை 5 ஆண்டுகாலம் நடத்தினார் முதல்வர் பூபேஷ் பாகல். சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி மோதல் இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையில் டெல்லி மேலிடம் தலையிட்டு இந்த பூசல்களை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகளைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு சாதகமாகத்தான் இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் பாஜகவுக்கு இதுவரை ஆறுதலான முடிவுகள் வரவும் இல்லை.

இந்த பின்னணியில் Political Critic நிறுவனம், சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இக்கருத்து கணிப்பில், ஆளும் காங்கிரஸ் கட்சி 55 முதல் 60 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவால் 27 முதல் 32 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என்கிறது இக்கருத்து கணிப்பு. இதர கட்சிகள் 2 முதல் 5 இடங்களில் வெல்லும் சாத்தியம் உள்ளதாம்.
சத்தீஸ்கரில் இடைவிடாத காங்கிரஸ் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் அம்மாநிலத்தில் கருத்து கணிப்பு முடிவுகளை உறுதி செய்வதாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று சத்தீஸ்கரில் பிரசாரம் செய்கையில் மழலையர் வகுப்பு முதல் முதுகலை வகுப்பு வரை காங்கிரஸ் ஆட்சியில் இலவசமாக கல்வி வழங்கப்படும் என அறிவித்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பழங்குடியினரை கவரும் வகையில் டெண்டு இலை பறிப்போருக்கு மாதம் ரூ4,000 வழங்கப்படும் என்கிற ராகுலின் அறிவிப்பு மிகப் பெரும் ஆதரவு அலையை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications