மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாஜக தொண்டர்கள் கொலையால் காசர்கோடு, திருச்சூரில் பதற்றம். போலீஸ் குவிப்பு
கேரளா : திருவோண நாளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த கொலைவெறி தாக்குதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பா.ஜனதா தொண்டர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவியதால், அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நேற்று முன்தினம் திருவோண பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது காசர்கோட்டில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கூலிப்படையினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் நாராயணன் என்பவரை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவத்தில் நாராயணனின் தம்பி அரவிந்தன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த கொலைக்கு அரசியல் பகை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதே போன்று திருச்சூர் மாவட்டம் வெள்ளிக்குளங்கரையில் அபிலாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பா.ஜனதா கட்சி தொண்டரான இவர் தனது நண்பருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளை வழிமறித்த கும்பல் அபிலாஷை சரமாரியாக வெட்டியது. இதில் அபிலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய நண்பர் சதீஷ் பலத்த வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அபிலாஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் தான் காரணம் என்று பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
கட்சித் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று காசர்கோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும், திருச்சூர் மாவட்டத்தில் பா.ஜனதா சார்பிலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், இரு மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications