பாஜக எம்.பி. ஆதித்யநாத்தின் வெறிப் பேச்சு.. தலைவர்கள் கடும் கண்டனம்!
டெல்லி: மத துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் உ.பியைச் சேர்ந்த பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவரை உடனடியாக உ.பி. அரசு கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. இப்படி துவேஷ கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார் ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அவர் பேசும்போது, உ.பியில் நடந்த மதக் கலவரங்களுக்கு இங்கு வாழும் சிறுபான்மையினரே காரணம் என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நோய்டா பேச்சு
நோய்டாவில் நடந்த மாநில சட்டசபை இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களாகி விட்டது. இதுவரை மேற்கு உ.பியில் 450 மதக் கலவரங்கள் நடந்துள்ளன.

சிறுபான்மையினர் அதிகரிப்பே காரணம்
இதற்குக் காரணம், குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினர் அந்தப் பகுதியில் அதிகரித்து விட்டதே காரணம்.

ஏன் கிழக்கு உ.பியில் கலவரம் வரவில்லை
அதேசமயம் கிழக்கு உபியில் கலவரம் எதுவும் நடக்கவில்லை. இதிலிருந்தே நீங்கள் காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெர்சன்டேஜ் கணக்கு!
10 முதல் 20 சதவீத சிறுபான்மையினர் உள்ள பகுதிகளில் கலவரம் இல்லை. சிறிய அளவிலேயே அவை இருக்கும். அதேசமயம், 20 முதல் 30 சதவீத சிறுபான்மையினர் உள்ள பகுதிகளில் கலவரங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. 35 சதவீத்திற்கும் மேல் போய் விட்டால் அங்கு முஸ்லீம் அல்லாதோருக்கு இடமே இல்லை என்று பேசினார் ஆதித்யநாத்.

தலைவர்கள் கண்டனம்
இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி, ரஷீத் ஆல்வி ஆகியோர் ஆதித்யநாத்தின் பேச்சு மத துவேஷத்தைத் தூண்டுவதாக உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்க
ரஷீத் ஆல்வி கூறுகையில் ஆதித்யநாத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக பேசி வருகிறார். அவரைக் கைது செய்ய வேண்டும். அவரால் சமூகத்திற்கு ஆபத்து எனறு கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸும் கண்டனம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறுகையில், மக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்ட பாஜக முயன்று வருகிறது. அதன் எதிரொலியே ஆதித்யநாத்தின் பேச்சு என்றார்.












Click it and Unblock the Notifications