மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது! நாளை மறுநாள் வாக்குப் பதிவு!!
மும்பை: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. இந்த 2 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதேபோல் ஹரியானா மாநிலத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் இந்த முறை நடைபெறும் சட்டசபை தேர்தல் முற்றிலும் வித்தியாசமானது. கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா- பா.ஜனதா கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அதேபோல கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்தித்தன.
5 முனை போட்டி
ஆனால், இந்த முறை கூட்டணிகள் உடைந்து அந்த கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தேர்தல் களம் காண்கின்றன. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது.
நட்சத்திர வேட்பாளர்கள்
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 117 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார், பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வினோத் தாவ்டே, ஏக்நாத் கட்சே, மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பங்கஜா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர்.
போட்டியிடாத உத்தவ், ராஜ் தாக்கரேக்கள்
ஆனால் முதல்வர் பதவியை குறிவைத்து இருக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை.
பிரதமர் மோடி பிரசாரம்
கடந்த மாதம் 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் முடிந்ததை தொடர்ந்து தேர்தல் பிரசார திருவிழா களை கட்ட தொடங்கியது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். அன்று முதல் ஓரிரு நாட்களை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் தீவிர பிரசாரம் செய்தார்.
சோனியா, ராகுல் பிரசாரம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 9-ந் தேதி மகாராஷ்டிராவில் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். இதேபோல காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
ஹரியானாவில்..
ஹரியானாவில் காங்கிரஸ், பா.ஜனதா, இந்திய தேசிய லோக்தளம் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டன. இங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு இந்த 3 கட்சிகள் இடையேயும் கடுமையான போட்டி நிலவுகிறது.
பிரசாரம்
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஓம்பிரகாஷ் சவுதாலா ஆகிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று பிரசாரம் ஓய்வு
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்கிறது. இதனால் இன்று தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது கடைசிக் கட்ட பிரசாரத்தை செய்ய உள்ளனர். இதனை தொடர்ந்து தலைவர்கள், வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்களில் பேசவோ, ஊர்வலங்களாக செல்லவோ தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. ஆனால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கலாம்.
புதன் வாக்கு- ஞாயிறு முடிவு
இதைத் தொடர்ந்து வருகிற புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.
எதிர்பார்ப்பு
மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்ற பின்பு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல் என்பதால் இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.