'சோலோ வின்னர்' பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி ரெடி?
டெல்லி: தமிழகத்தில் சோலோவாக வெற்றிபெற்ற ஒரே பாஜக வேட்பாளரான பொன்னனாருக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் காத்துக் கொண்டிருப்பதாக பாஜக கட்சி கூறுகிறது.
கூட்டணிக்கு அச்சாரம்
தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக என இரண்டாம் கட்டத்திலுள்ள அரசியல் கட்சிகளை இணைந்து வானவில் கூட்டணி அமைத்ததில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பெரும் பங்கு உள்ளது. இதற்கு பரிசாக இவருக்கு கன்னியாகுமரி தொகுதியை ஒதுக்கியது பாஜக.கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள் பலவற்றை நடத்தி முன் நின்றவர் என்பதால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது.

ஜாதி வாக்கு சிதறியது
கன்னியாகுமரி தொகுதியில் கிறிஸ்தவர்களும், இந்துக்களும் சரிசமமாக உள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார்கள். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் இந்து நாடார்கள். இதனால் அவர் சார்ந்த நாடார் ஜாதி வாக்குகள் அனைத்து கட்சிகளுக்கும் சிதறும் வாய்ப்பு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராகவே இருந்தது.
மதரீதியான வாக்கு கிடைத்தது
இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதியை விட மதம் தான் வாக்குகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நீருபூத்த நெருப்பாக பல ஆண்டுகாலமாக அங்கு பகை புகைந்து கொண்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சிதறியது. இந்து வாக்குகள் ஏறத்தாழ மொத்தமாக பாஜகவுக்கு விழுந்ததாக கூறப்படுகிறது.
வெற்றிக்கு பரிசு
அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசர் பாஜகவில் இணைந்து, வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மத்திய இணை அமைச்சர் பதவி வகித்தார். ஆனால் பாஜகவில் நேரடியாக யாரும் வெற்றி பெற்று கேபினெட் அமைச்சராகவில்லை. பொன் ராதாகிருஷ்ணனும்கூட வாஜ்பாய் ஆட்சியில் இணை அமைச்சராக பதவி வகித்துள்ளாரே தவிர கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சராகவில்லை. தமிழகத்தில் பாஜக தீண்டத்தகாத கட்சி போலவே பார்க்கப்படும் நிலையிலும், தென் கோடி கன்னியாகுமரியில் அக்கட்சியை வெற்றி பெறச்செய்த ராதாகிருஷ்ணனுக்கு கேபினெட் அமைச்சர் பதவி கேரண்டியாக காத்திருப்பதாக கூறுகிறார்கள் பாஜகவினர்.
அதிமுக சேர வாய்ப்பு
பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைக்க காய் நகர்த்தல்கள் ஆரம்பித்துள்ளன. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தாலும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய உறுப்பினர் ஆதரவு இல்லை என்பதால் சர்ச்சைக்குறிய சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் வரலாம். மாநிலங்களவையில் அதிமுகவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ளதை கருத்தில் கொண்டு அவர்களை கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவிகளை அளித்து, அதற்கு பிரதி உபகாரமாக, மாநிலங்களவையில் அதிமுகவின் ஆதரவை பெற பாஜக திட்டமிட்டுள்ளது.
பாமகவுக்கும் ஆசை
பாமகவிலும் அன்புமணிக்கு அமைச்சர் பதவி கேட்டு காய் நகர்த்தல்கள் ஆரம்பித்துள்ளன. விடாப்பிடியாக பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க அன்புமணிதான் காரணம். பாஜக வென்றால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணியை பாஜகவை நோக்கி ஈர்த்ததாக கூறுகிறார்கள். எனவே அந்த நோக்கத்தை நிறைவேற்ற பாமக மும்முரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications