பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: நீண்ட நாட்களாக டபாய்த்து வந்த "அட்டாக்" பாண்டி மும்பையில் கைது
மும்பை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டரை ஆண்டுகாலமாக தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் மதுரையில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் வேளாண் விற்பனை குழுத் தலைவர் அட்டாக் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளி அட்டாக் பாண்டியை தவிர மற்ற கூட்டாளிகள் 11 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலைக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களும், சரணடைந்தவர்களும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

தலைமறைவான அட்டாக் பாண்டி
முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டி மும்பையில் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். கொலை நடந்து இரண்டரை வருடங்களுக்கு மேல் ஆகியும் அட்டாக் பாண்டி போலீசாரிடம் சிக்கவில்லை. அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மும்பையின் புறநகர் பகுதியான வைசூ என்ற இடத்தில் வைத்து அட்டாக் பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் விசாரணை
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தார், இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அட்டாக் பாண்டியை மும்பையில் கைது செய்துள்ள போலீசார் விரைவில் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளனர். சென்னையில் விசாரணை நடத்தும் போது, பொட்டு சுரேஷ் வழக்கில் அட்டாக் பாண்டி கொடுக்கும் வாக்குமூலம் முக்கியமான இருக்கும்.

முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள்
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் குழுவாக செயல்பட்டது யார்? யார்? கூட்டுச்சதியில் ஈடுபட்டவர் யார்? யார்? என்பது விரைவில் தெரியவரும் என்பதால் அட்டாப் பாண்டி கைது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொலைக்கான பின்னணி
பொட்டு சுரேஷ் அழகிரியின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அதனால் திமுக ஆட்சியின் போது மிகுந்த செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்தார். தான் நினைத்தை சாதிக்கும் பொட்டு சுரேஷுக்கு, நண்பர்களை விட மறைமுக எதிரிகள் அதிகம் இருந்தனர். குறிப்பாக காண்டிராக்ட் தொழிலிலும், திமுகவிலும் பல எதிரிகள் இருந்தனர்.

அட்டாக் பாண்டி பதவி பறிப்பு
திமுக ஆட்சியின் போது கட்டப்பஞ்சாயத்து, நிதி நிறுவன மோசடி போன்ற புகாரில் சிக்கிய அட்டாக் பாண்டியிடம் இருந்து வேளாண் விற்பனை குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் மு.க.அழகிரியை சந்திப்பதற்கும் அட்டாக் பாண்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு காரணம் பொட்டு சுரேஷ் தான் என்று எண்ணிய அட்டாக் பாண்டி, அவருடன் மோதி வந்தார்.

பொட்டு - அட்டாக் மோதல்
இந் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பெட்டு சுரேஷ் போலீசில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அட்டாக் பாண்டியை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்தார். இந்நிலையில் பொட்டுவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். சிறையில் இருந்து வெளியே வந்த பொட்டு சுரேஷ், மு.க.அழகிரியை சந்திக்கவில்லை. எனவே இருவருக்கும் பிரச்சனை என்று கூறப்பட்டது.

அட்டாக் போட்ட திட்டம்
இதற்கிடையே அட்டாக் பாண்டியால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என நினைத்த பொட்டு அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு கும்பலுக்கு அட்வான்ஸ் தந்ததாகவும் தெரிகிறது. இந்தக் கும்பல் அட்டாக் பாண்டியின் உறவினர்கள் என்பதும், இவர்களுக்கும் அட்டாக் பாண்டிக்கும் குடும்பப்பகை இருந்ததை வைத்து, இவர்களது உதவியை பொட்டு நாடியதாகவும் தெரிகிறது. ஆனால், இவர்கள் இந்தத் தகவலை அட்டாக் பாண்டிக்கு பாஸ் செய்துவிட்டதாகவும், இதையடுத்தே பொட்டுவை தீர்த்துக் கட்ட அட்டாக் பாண்டி முடிவு செய்ததாகவும் தெரிகிறது.

மு.க.அழகிரி பிறந்தநாள்
இந் நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பொட்டு சுரேஷ், மு.க.அழகிரியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதனால் தன்னை அழகிரியிடமிருந்து பொட்டு மீண்டும் பிரித்துவிடுவார் என்று அஞ்சிய அட்டாக், பொட்டு சுரேஷை மு.க.அழகிரியின் பிறந்தநாளன ஜனவரி 30ம் தேதி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் பொட்டு சுரேஷ் 29ம் தேதி கொடைக்கானல் சென்று விட்டார். அதனால் 30ம் தேதி கொலையை செய்ய முடியவில்லை.

போட்டு தள்ளிய அட்டாக் பாண்டி
2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி பொட்டு சுரேஷ் மீண்டும் மதுரை வந்துள்ளார். இரவில் அவர் வீடு திரும்பும் வழியில் கொலை செய்துள்ளனர். சாலையில் அவரை கொலை செய்ய முடியாவிட்டால் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கொல்லவும் திட்டமிட்டு இருந்தனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் அட்டாக் பாண்டி பிடிபட்டுள்ளதால் கொலைக்கான பின்னணியும் முக்கிய குற்றவாளி யார் என்பதும் தெரியவரும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications