மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்ற சித்தராமையாவுக்கு 1 கிலோ பன்றிக்கறி பார்சல் அனுப்பிய முத்தாலிக்!
பெங்களூர்: நான் மாட்டிறைச்சியை சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பன்றி மாமிசத்தை பார்சலில் அனுப்பி வைத்துள்ளார் ஸ்ரீராம சேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்.
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகள் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், "நான் மாட்டிறைச்சி சாப்பிட விரும்பினால், சாப்பிடுவேன். இதை யாராலும் தடுக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து பொது நிகழ்ச்சியொன்றில் பேசிய கர்நாடக மாநிலத்தின், ஷிமோகா மாவட்ட பாஜக செயலாளரான சென்னபசப்பா, சித்தராமையா தலையை வெட்டுவேன்.. என்று கூறி பீதி கிளப்பினார். இந்நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இத்தோடு இப்பிரச்சினை ஓய்வதாக இல்லை. மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்று கூறிய சித்தராமையா, பன்றி இறைச்சி சாப்பிடுவேன் என்று கூறத்தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக்.
சித்தராமையா பன்றி இறைச்சி சாப்பிடுவதை பகிரங்கமாக அறிவிக்கட்டும் என்று கூறிய பிரமோத் முத்தாலிக் பிஜாப்பூர் மாவட்ட ஸ்ரீராமசேனை அமைப்பின் சார்பில் 1 கிலோ பன்றி இறைச்சியை சித்தராமையாவுக்கு இன்று பார்சல் செய்து அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே மத துவேசத்தை உருவாக்கிவிட வாய்ப்பிருப்பதாக கூறி, பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம், முத்தாலிக்கை ஒரு மாதத்திற்கு அம்மாவட்டத்திற்குள் நுழைய இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.