கிரிமினல் எம்.பி., எம்எல்ஏக்களை பாதுகாக்கும் அவசர சட்டம்: மத்திய அமைச்சர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
டெல்லி: கிரிமினல் எம்.பி., எம்எல்ஏ,க்களைப் பாதுகாக்க வகை செய்யும் அவசர சட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.
கிரிமினல் எம்.பி. எம்.எல்.ஏக்கள் பதவியில் நீடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றி அமைச்சரவை ஒப்புதலுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சியிலேயே இந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த அவசர சட்டத்தை அமல்படுத்தினால் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் குறைந்து பெரும் இழப்பை சந்திக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களான அனில் சாஸ்திரி, மிலிந்த் தியோரா ஆகியோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த அவசர சட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று பிரணாப் முகர்ஜியிடம் பாஜக தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனை நடத்த வருமாறு மத்திய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மத்திய சட்டத் துறை அமைச்சர் கபில் சிபல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து இது தொடர்பாக விளக்கமும் அளித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications