விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியா மாயம்...போலீஸ் கைது செய்ததாக குற்றச்சாட்டு- குஜராத்தில் பதற்றம்!
விஹெச்பி தலைவர் தொகாடியா மாயமானதால் குஜராத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்: இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஹெச்பி) சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா மாயமானதாக குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான தொகாடியாவை இன்று காலை 10 மணி முதல் காணவில்லை என கூறி குஜராத்தின் பல பகுதிகளில் விஹெச்பி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் போலீசார்தான் தொகாடியாவை கைது செய்திருக்கலாம் என்பது விஹெச்பி தொண்டர்களின் குற்றச்சாட்டு. ஆனால் குஜராத் போலீசாரோ, 2015-ம் ஆண்டு வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொகாடியாவை கைது செய்ய தங்களது உதவியை ராஜஸ்தான் போலீசார் கேட்டனர்.
இது தொடர்பாக நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்தோம். ஆனால் தொகாடியாவை கைது செய்ய முடியவில்லை என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர் என்றார். தொகாடியா எங்கே இருக்கிறார்? அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. அவரை போலீசார்தான் தடுத்து வைத்துள்ளனர் என தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர் விஹெச்பி தொண்டர்கள். இதனால் குஜராத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.