அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. அதே நேரத்தில் பிரசவம்.. காத்திருக்கும் கர்ப்பிணிகள்
அயோத்தி: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஜனவரி 22ஆம் தேதி அதே நேரத்தில் அந்த நாளில்தான் தங்களுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என்று கூறி ஏராளமான கர்ப்பிணி பெண்கள் காத்திருக்கிறார்களாம்.
ராம ஜென்ம பூமி எனப்படும் அயோத்தியில் ஸ்ரீராமருக்காக மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அன்றைய தினம் கூர்ம துவாதசி. மிருகசீரிடம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 11 மணி 51 நிமிடம் முதல் 12 மணி 33 நிமிடம் வரை உள்ள நல்ல நேரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இது அபிஜித் முகூர்த்த நேரமாகும்.

ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல, ஜோதிட ரீதியாகவும், வானியல் சாஸ்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு மிக கவனமாக ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான நாளும், முகூர்த்த நேரமும் குறிக்கப்பட்டுள்ளது.
புராணங்களின் படி சிவ பெருமான், திரிபுராசுரன் என்ற அசுரனை வதம் செய்தது அபிஜித் முகூர்த்தத்தில் தான் என சொல்லப்படுகிறது. அதனால் இது அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கக் கூடிய நேரம் என சொல்லப்படுகிறது. வாழ்வில் உள்ள அனைத்து விதமான துன்பங்களும் நீங்குவதற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதிய தொழில், வேலை, முதலீடு உள்ளிட்ட நிதி தொடர்பான விஷயங்கள், புது வீடு குடிபோதல், செல்வ வளத்திற்கான பூஜை ஆகியவற்றை செய்வதால் அதிர்ஷ்டம், வளர்ச்சியை தரும். இந்த நேரத்தில் துவங்கப்படும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரக் கூடியதாகும்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிரபலங்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அரசியல் பிரமுகர்களுக்கும் பாஜகவினர் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 22ஆம் தேதியன்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பிரசவம் பார்க்குமாறு ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியின் கீழ் உள்ள தாய் சேய் மருத்துவமனை மருத்துவர்களிடம் பல கர்ப்பிணிப் பெண்கள் ஜனவரி 22 ஆம் தேதி சிசேரியன் மூலம் பிரசவம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அரசு மட்டுமின்றி பல தனியார் மருத்துவமனைகளுக்கும் இது போன்ற கோரிக்கைகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 22ஆம் தேதி 35 சிசேரியன் அறுவை சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் சீமா திவேதி தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் பிறந்தால், ராமருக்கு இருக்கும் அதே குணங்கள் தங்கள் குழந்தைக்கு இருக்கும் என தாய்மார்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications