அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கினார் பிரணாப் !
டெல்லி: மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கினார்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 42 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பா.ஜனதா 11 இடங்களிலும், அருணாச்சல் மக்கள் கட்சி 5 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. அம்மாநிலத்தின் முதல்வராக நபம்துகி பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரசில் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக ஒரு பிரிவினர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி அணியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாரதிய.ஜனதா மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனால் காங்கிரஸ் அதிர்ப்தி எம்எல்ஏக்கள் பாஜகவோடு கைகோர்த்து முதல்வருக்கு எதிராக போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை இட்டா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தினர். அதிருப்தி அணியைச் சேர்ந்த துணை சபாநாயகர் நூர் தாங்டாக் சபையை நடத்தினார். இதில் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக கலிகோபால் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், முதல்வர் நபம்துகி பதவி விலக மறுத்ததால் ஆளுநர் கோதி பிரசாத்துக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.
மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு பிரணாப் உடனே ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக விளக்கும் அளிக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கம் கேட்டார். இதனை அடுத்து ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து விளக்கம் அளித்தார் ராஜ்நாத் சிங்.
இதையடுத்து மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனிடையே குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications