பாஸ் செய்வதாக ஏமாற்றி மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்
ஹரியானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பள்ளி முதல்வர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
சன்டிகர்: ஹரியானாவில் பத்தாம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள கோஹனா நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அந்த பள்ளியின் முன்னாள் மாணவர். பத்தாம் வகுப்பு உடற்கல்வி பாடப்பிரிவில் தேர்ச்சி பெற வைப்பதற்கு அந்த மாணவியின் தந்தையிடம், ரூ.10,000 பணம் கேட்டுள்ளார் பள்ளியின் முதல்வர்.
அத்தோடு நிற்காமல் தேர்வு நடைபெற்ற மார்ச் 8ம் தேதி, மாணவியையும், அவரது தந்தையையும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துள்ளார் பள்ளி முதல்வர். இதையடுத்து அந்த வீட்டிற்கு இருவரும் சென்றனர். அப்போது சம்மந்தப்பட்ட மாணவிக்கு பதிலாக வேறொரு மாணவியை தேர்வு எழுத வைத்திருப்பதாகவும், தேர்வு முடியும் வரை மாணவியை இந்த வீட்டில் இருக்கட்டும் என்று பள்ளி முதல்வர் கூறியதை நம்பி, மகளை அங்கு விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார் தந்தை.
தந்தை திரும்பி வந்தபோது, அழுதபடி இருந்து மாணவி, பள்ளி முதல்வர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தந்தையிடம் புகார் கூறினார். மேலும் அந்த வீட்டில் இருந்த இரண்டு பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்கு உதவியதாகவும் மாணவி தெரிவித்தார். தந்தையும், மகளும் பேசிக்கொண்டிருந்த வேளையில், பள்ளி முதல்வர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதையடுத்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் வாக்குமூலத்தைப் பெற்ற போலீசார், பள்ளி முதல்வர் மீதும், அவருக்கு உதவிய இரண்டு பெண்கள் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கிரமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. ஹரியானாவில் பள்ளி மாணவிகள் பாலியல் பாதிக்கு ஆளாவது தொடர் கதையாகி உள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் ஹரியானாவில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.