சட்டத்திற்கு உட்பட்டதுதான் தனிமனித சுதந்திரம்... ஆதார் வழக்கில் மத்திய அரசு பதில்
இந்தியாவில் தனிமனித சுதந்திரம் என்பது , சட்டத்துக்கு உட்பட்ட ஒன்றுதான் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
டெல்லி: ஆதார் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டது தான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
ஆதார் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில் இன்று பதிலளித்த மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், "தனிமனித சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே ஆகும். அது அடிப்படை உரிமையாக அனுபவிக்க முடியாது" என்று வாதிட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் ஆதார் முக்கியம் என்ற நிலை இந்தியா முழுக்க இருக்கிறது. அரசின் திட்டங்களின் பயனைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டை தேவை என்றே அரசு கூறுகிறது.
இந்த நிலையில், ஆதார் கார்டு கட்டாயம் என்பது நாட்டில் பெரிய அளவுக்கு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிமனித உரிமை என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதில், மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களில் தனிநபர்களின் சுய விவரங்கள், தகவல்களை சேகரிப்பதன் மூலம் தனிமனித ரகசியத்துக்கான உரிமை பறிக்கப்பட்டு தனிமனித சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் அரசியல் சாசனம் தனிமனித சுதந்திரம், தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தில், கடந்த ஒருவாரமாக விசாரணை நடந்து வருகிறது.
இதில் இன்று பதில் வாதம் செய்த மத்திய அரசின், அட்டர்னி ஜெனரல், " தனிமனித சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதே ஆகும். அது அடிப்படை உரிமையாக அனுபவிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications