எங்களுக்கும் நிவாரணம் வேணும்... கொடி பிடிக்கும் தனியார் விமான உரிமையாளர்கள்
மும்பை: மழை வெள்ளத்தால் சேதமடைந்த 8 தனியார் விமானங்களின் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ.200 கோடி வரை இழப்பீடு கோர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கல்யான் ஜுவல்லர்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், சன் டிவி, கருடா ஏர்வேஸ்,ஜெட் ஏர்வேஸ், ஜாய் ஜெட்ஸ் உள்ளிட்ட 8 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வெள்ள பாதிப்பு காரணமாக இழப்பீடு கேட்டு விமான போக்குவரத்துத் துறையில் இருந்து இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நியூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் கூறும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பகுதியளவு சேதமடைந்த 8 தனியார் விமானங்களின் உரிமையாளர்கள் சுமார் ரூ.200 கோடி வரை இழப்பீடு கோருவார்கள் என தெரிகிறது. பொதுவாக இயந்திரங்கள் சேதமடைந்தால் மட்டுமே இழப்பீடு கொடுக்கப்படும், விமானத்தை நிறுத்திவைத்துவிட்டு அதனால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப்பீடு கோர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் அஜீத் குமார் கூறுகையில், கல்யான் ஜுவல்லர்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், கருடா ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறி, ரூ.80 கோடி இழப்பீடு கோரியுள்ளன என்றார்.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்களுக்கும், சன் டிவிக்கு சொந்தமான ஒரு விமானத்துக்கும் இழப்பீடு கேட்டு கோரிக்கை வந்துள்ளது. அந்த விமானங்களின் சேதத்தை மதிப்பிட அமைக்கப்பட்டுள்ள குழு இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அதன் பின்னரே இழப்பீடு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார் யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் டி.எல்.அலமேலு.












Click it and Unblock the Notifications